நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக அமைதி, பொருளாதாரத்தைப் பாதிக்கும் வன்முறையை நிறுத்த ASEAN நாடுகளின் ஒருமித்த செயல் அவசியம்: ஜெஃப்ரி டி. சாக்ஸ்

புத்ராஜெயா: 

ஆசியாவின் மேற்கு பகுதியில் நடைபெறும் தாக்குதல்களை, குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்காவின் நடவடிக்கைகளை, ASEAN நாடுகள் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைத்த முன்னேற்றத் தீர்வுகள் வலையமைப்பு (SDSN) தலைவர் பேராசிரியர் ஜெஃப்ரி டி. சாக்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் உலக அமைதியையும், உலக பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அவர் கூறினார்.

“ASEAN உறுப்புநாடுகளின் தலைவர்கள் அனைவரும் ‘இது நம்மை பாதிக்கிறது, உலகத்தையே பாதிக்கிறது; இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்று தெளிவாகக் கூற வேண்டும்.

“இந்த நிலைமை முடிவுக்கு வர வேண்டும் என்றால், தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்களது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

“ஒவ்வொரு நாடும் தனித்தனியாகச் செயல்பட முடியாது; ஆனால் 700 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக ஒன்றிணைந்து பேசும்போது அது மிகப் பெரிய சக்தியாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற “உலகளாவிய நிலையற்ற தன்மையின் சகாப்தத்தில் மலேசியா, ஆசியானுக்கான உத்திகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மலேசியா மடானி அறிவியல் மன்றம் நிகழ்விற்குப் பிறகு அவர் இதனை கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கிய உரையாற்றியும் கலந்துரையாடலை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காதிரும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் ஹசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

BRICS போன்ற உலகளாவிய கூட்டமைப்புகளும் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க முடியும் என்று மேலும் பேசிய சாக்ஸ் தெரிவித்தார்.

இந்தப் போரை நிறுத்துவதற்கு முக்கிய நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேல், அமெரிக்காவின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என்று உறுதியாகக் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும், அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள பல நாடுகள் உண்மையை வெளிப்படையாகச் சொல்ல அஞ்சுவதால் இதுவரை எந்த கூட்டமைப்பும் இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகையால், பிரதமர் அன்வார் போன்ற நேர்மையான, தெளிவான, ஒழுக்கநெறி கொண்ட தலைவர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

“உலக நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ‘இந்த அநீதியை நிறுத்துங்கள்’ என்று சொன்னால், அவர்கள் அதை நிறுத்த வேண்டிய நிலை உருவாகும்,” என்றார் அவர்.

இதற்கு முன், அதே மன்றத்தில் பேசிய அவர், கல்ஃப் ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளும், ஈரானும் உடனடியாக ஒன்றிணைந்து வெளிநாட்டு இராணுவ தலையீட்டை எதிர்க்க வேண்டும் என்றார்.

“இந்தப் போர் முடிவடைய வேண்டுமெனில், கல்ஃப் நாடுகளும் ‘இந்த போர் நிறுத்தப்பட வேண்டும்; இஸ்ரேல் தங்களது நாட்டுக்கு திரும்ப வேண்டும்’ என்று தெளிவாகக் கூற வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இதுவரை இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்த நாடுகள் ரஷ்யா, சீனா, சோமாலியா மட்டுமே எனவும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset