நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீ விபத்தில் கருகிய வீட்டிற்கு அருகிலேயே கண்ணீருடன் வாழும் 66 வயது மூதாட்டி

பாச்சோக்: 

கிளாந்தான், பாச்சோக் மாவட்டத்திலுள்ள கம்போங் முஜூர் பகுதியில், கடந்த மார்ச் 8-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் தனது வீட்டை இழந்த 66 வயது ரோஹானி முஹம்மத் என்ற மூதாட்டி, தனது மூன்று பிள்ளைகளுடன் ஒரு சிறிய கூடாரத்தில் தங்கி, வாழ்ந்து வருகிறார். 

இந்தத் தீ விபத்தில் இவரது வீடு மட்டுமன்றி, இரண்டு கார்கள், மூன்று மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. உறவினர்கள் உதவி செய்ய முன்வந்தபோதிலும், தனது மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், தீக்கிரையான வீட்டின் அருகே  கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்.

இந்த விபத்து ரோஹானியின் குடும்பத்திற்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தின்போது, இவரது இரண்டாவது மகனான 41 வயது சே முஹம்மத் ஃபைசுல் சே சுலைமான், வீட்டிற்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

உயிரிழந்த மகன் ஒரு காலத்தில் பல்கலைக்கழகத்தில் சிறப்பாகக் கல்வி பயின்று 'டீன்' விருது பெற்றவர் என்பதும், பின்னர் ஏற்பட்ட மன அழுத்தத்தால் படிப்பைத் தொடர முடியாமல் போனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தன்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், படுக்கைக்குத் தீ வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அந்தத் தாய் நேரில் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்.

தற்போது வரவிருக்கும் நோன்புப் பெருநாள் தங்களுக்கு எந்த மகிழ்ச்சியையும் தரப்போவதில்லை என்று கூறும் ரோஹானி, தனது மறைந்த கணவர், மகனின் நினைவுகள் நிறைந்த அந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 

தற்போதைக்குத் தர்மசிந்தனை கொண்டவர்கள் வழங்கும் உணவை உட்கொண்டு காலத்தைக் கழிக்கும் இக்குடும்பம், தங்களின் தற்போதைய இடத்திற்கு அருகிலேயே ஒரு வாடகை வீடு கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறது.

இந்தக் குடும்பத்திற்கு உதவ விரும்புவோர், மேபேங்க் (Maybank) கணக்கு எண் 006128744105 நிதியுதவி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset