நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

‘தவறான கணிப்பு அல்ல, போர் குற்றம்’ – WHO கடும் கண்டனம்

லண்டன்: 

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதலின் பின்னணியில் மருத்துவமனைகள், பள்ளிகள், மருத்துவ பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்களை உலக சுகாதார அமைப்பின் (WHO) பொதுச் செயலாளர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் நேற்று கடுமையாகக் கண்டித்துள்ளார் என்று அனடோலு செய்தி நிறுவனம் (AA) தெரிவித்துள்ளது.

இத்தகைய செயல்களைத் ‘தவறான கணிப்பு’ அல்லது ‘சுற்றுப்புற சேதம்’ எனக் கருத முடியாது; மாறாக அவை போர் குற்றங்களாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“மருத்துவமனை அல்லது பள்ளிகளில் குண்டு வீசுவது, பராமெடிக் பணியாளர்களைக் கொல்வது, பொதுமக்களைப் பசியால் வாடச் செய்வது என இவை அனைத்தும் போர் குற்றங்கள். அவற்றை அதற்குரிய பெயரிலேயே அழைக்க வேண்டும்,” என்று அவர் சமூக ஊடக தளமான X-இல் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 அன்று, ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள மினாப் நகரில் அமைந்துள்ள ஷஜரே தைய்யெபெ ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில் குறைந்தது 150 பெண் மாணவிகள் உயிரிழந்தனர்.

அமெரிக்க(AS), இஸ்ரேல் இணைந்து அந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் அப்போதைய உயரிய தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி உட்பட 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு பதிலடி நடவடிக்கையாக தெஹ்ரான், இஸ்ரேலைக் குறிவைத்து ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதுடன், அமெரிக்க இராணுவ வசதிகள் உள்ள ஜோர்டான், ஈராக், சில வளைகுடா நாடுகளையும் குறிவைத்துள்ளது.

இந்த மோதல் லெபனானுக்கும் பரவி, ஹிஸ்புல்லாவுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது. கடந்த மார்ச் 2 முதல் இடம்பெற்ற தாக்குதல்களில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset