நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இராணுவ பதற்றம் அதிகரிப்பு: வடகொரியாவின் ஏவுகணை சோதனை

சியோல்: 

வடகொரியா சனிக்கிழமை ஜப்பான் கடலை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டு படைத்தளபதி தலைமையகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியா, அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் இராணுவப் பயிற்சிக்கு சில நாட்களுக்கு முன்பு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த ஏவுதல் இடம்பெற்றுள்ளது.

அறிக்கையின் படி, மதியம் 1.20 மணியளவில் சுனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் கிழக்கு கடலை நோக்கி பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவை சுமார் 350 கிலோமீட்டர் தூரம் பறந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஏவுகணைகளின் தொழில்நுட்ப விவரங்களை தெளிவுபடுத்த தென் கொரியா, அமெரிக்க அதிகாரிகள் மேலதிக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எந்தவிதத் தூண்டுதலுக்கும் திடமான பதில் அளிக்க தயாராக உள்ளதாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சும் ஏவுகணை ஏவப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

அவை சுமார் 80 கிலோமீட்டர் உயரம் வரை சென்ற பின்னர் ஜப்பானின் தனிச்சார் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக கூறப்படுகிறது. 

தென் கொரியா அதிபர் அலுவலகம் இந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறும் தூண்டுதல் என கண்டித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset