நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாக்தாத், துபாய் சர்வதேச விமான நிலையங்கள் தாக்குதல்

பாக்தாத்: 

அமெரிக்காவின் (AS) தூதரக வசதிகள் அமைந்துள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாக ஈராக் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

 இரவு நேரத்தில் நடந்த அந்தத் தாக்குதலுக்குப் பிறகு நள்ளிரவு சமயத்தில் விமான நிலையத்தைக் குறிவைத்து மேலும் ராக்கெட், ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது என்று AFP செய்தி வெளியிட்டுள்ளது.

 நேற்று மாலை சுமார் 7 மணியளவில் ஐந்து ராக்கெட்டுகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் குறிவைத்து தாக்கின.

இதன் காரணமாக விமான நிலைய ஊழியர்கள் நால்வர், பாதுகாப்பு பணியாளர்கள், ஒரு பொறியாளர் ஆகியோர் காயமடைந்தனர் என்று இதற்கு முன்பு, ஈராக் அரசின் பாதுகாப்பு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், அந்த ராக்கெட்டுகள் விமான நிலையப் பகுதியையும் ஒரு நீர் உப்புநீக்க நிலையத்தையும் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு சில ராக்கெட்டுகள், டாஇஷ் (Daesh) குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்கள் வைக்கப்பட்டுள்ள ஒரு சிறைச்சாலைக்கு அருகிலுள்ள பகுதிகளிலும், அமெரிக்க தூதரக வசதிகளுக்கு அடுத்ததாக அமைந்துள்ள ஈராக் விமானப்படை தளத்திலும் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரக வசதிகள் உள்ள விமான நிலையத் தளத்திற்குள்ளும் ராக்கெட்டுகள் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்பு, முதல் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் ஏவுதளத்தைப் பாக்தாத் தென்மேற்கு பகுதியில் உள்ள அல்-ரட்வானியா பகுதியில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்ததாக அரசு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பாக்தாத் விமான நிலையம் பல இராணுவ வளாகங்களை உள்ளடக்கியது. அவை ஈராக் இராணுவம், பாதுகாப்புப் படைகளுக்குச் சொந்தமான பல தளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவின் தூதரக, தளவாட வசதிகளும், ஒரு மத்திய சிறையும் அங்கு அமைந்துள்ளன.

இதற்கிடையில், துபாய் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர் என்று துபாய் ஊடக அலுவலகம் இன்று தகவல் வெளியிட்டதாக REUTERS செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.

மேலும், அந்த ட்ரோன் தாக்குதல் ஒரு எண்ணெய் தொட்டியைத் தாக்கியதாகவும், தீயைக் கட்டுப்படுத்த சிவில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset