நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செக்கு சந்திரா வீட்டில் தாக்குதல்: திட்டமிட்டவர் உட்பட 12 பேர் கைது

ஷா ஆலம்: 

பூச்சோங் தாமான் கின்ராரா குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற சேதப்படுத்தல், குற்றவியல் மிரட்டல் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 12 பேரை போலிஸ் கைது செய்துள்ளது. 

30 முதல் 40 வயதுக்கிடைப்பட்ட சந்தேகநபர்கள் மீது தேசிய குற்றப்புலனாய்வு பிரிவு, சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு பிரிவு, செர்டாங் மாவட்ட போலிஸ் இணைந்து நடத்திய நடவடிக்கையின் போது பந்திங், சுபாங், செர்டாங் உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்ததாவது, கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேருக்கு இந்த சம்பவத்துடன் நேரடி தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் முக்கிய திட்டமிடுபவரும் உள்ளதாகவும் கூறினார்.

தற்போது ஏழு பேர் காவலில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதுடன், ஐந்து பேர் போலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஐந்து பேருக்கு பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான முந்தைய பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அனைவரிடமும் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேலும் மூன்று சந்தேகநபர்களை போலிஸ் தொடர்ந்து தேடி வருகிறது.

இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் டொயோட்டா வியோஸ், ஹோண்டா சிட்டி, நிசான் அல்மேரா ஆகிய மூன்று கார்கள், ஹோண்டா வேவ், யமஹா Y16 என்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள், மேலும் 14 கைப்பேசிகள், ஒரு தலைக்கவசம், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த மார்ச் 9, 10 ஆம் தேதிகளில் சமூக செயற்பாட்டாளரான செக்கு சந்திராவின் வீட்டை முகமூடி அணிந்த நபர்கள் தாக்கி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், பின்னர் பெட்ரோல் குண்டு வீசியதால் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்தது என போலிஸ் தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset