செய்திகள் மலேசியா
பள்ளிகளில் ஐஎஸ் தாக்கத்தைத் தடுக்க கல்வி அமைச்சகம் கடும் கண்காணிப்பு
பட்டர்வொர்த்:
மாணவர்கள் எந்தவொரு வன்முறை சார்ந்த செயல்பாடுகளிலும், குறிப்பாக இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) அமைப்புடன் தொடர்புடைய நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்க, கல்வி அமைச்சகம் (KPM) தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் நெருக்கமாக கண்காணித்து வருகிறது.
பள்ளி மாணவர்களிடையே அந்தச் சிந்தனை எழாமல் இருக்க அதிகாரிகளுடன் கல்வி அமைச்சகம் எப்போதும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் அந்த வகையான செயல்பாடுகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று அமைச்சர் பத்லினா சிடேக் தெரிவித்தார்.
“இந்த விஷயத்தை (இளைஞர்களை இலக்காகக் கொண்ட தீவிரவாத செயல்பாடுகள்) விசாரணைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம்.
“அதே நேரத்தில் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் வன்முறை செயல்களில் ஈடுபடுவது குறித்து நாம் கண்காணித்து வருகிறோம்; இதன் மூலம் அந்த வகையான அந்நிய சிந்தனைகள், குறிப்பாக எங்கள் கல்வி நிறுவனங்களுக்குள் நுழையாமல் தடுக்கப்படுகிறது.
“எனவே, சட்டத்தின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், எங்கள் குழந்தைகள், மக்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் டாயிஷ் (ஐஎஸ்), வன்முறையுடன் தொடர்புடைய தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும் அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறோம்,” என்றார் அவர்.
நாட்டில் இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஐஎஸ் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார். இந்த நடவடிக்கைகள் பள்ளி மாணவர்களையும் பாதிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில், தேசிய காவல் படை (PDRM) சிறப்பு பிரிவு நடத்திய சிறப்பு நடவடிக்கையில், 16 முதல் 21 வயதுக்குள் உள்ள ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் ஐஎஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு முன், நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பத்லினா சிடேக், இன்று இங்குள்ள செபெராங் ஜாயா மருத்துவமனையில் நடைபெற்ற “மருத்துவமனையில் பள்ளி” திட்டத்தைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.
முன்னதாக, தேசிய போலிஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில், நாட்டில் இளைஞர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.
அந்தக் குழுவினரின் செயல்பாடுகளில் தீவிரவாத சிந்தனைகளைப் பரப்புதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், பிரசாரப் பொருட்களை விளம்பரப்படுத்துதல், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் தொடர்பான தாக்குதல் திட்டங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்குகின்றன என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 12:43 pm
மீன் விலை உயர்த்தப்படக்கூடாது: மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம்
March 13, 2026, 12:41 pm
போர் பதற்றத்திற்கு மத்தியில் கடல் பணியில் 18 மலேசியர்கள்
March 13, 2026, 10:43 am
நிதி அறிக்கையில் போலி தகவல்கள்: முன்னாள் நிறுவனத் தலைவருக்கு கைது உத்தரவு
March 13, 2026, 10:23 am
லிபிஸ் மாவட்டத்தில் தொடர்ச்சியான சாலை விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் உயிரிழப்பு
March 13, 2026, 10:22 am
புனித மக்காவில் உம்ரா யாத்திரிகர்கள் தங்கும் பிரபல விடுதியில் தீ விபத்து
March 13, 2026, 10:04 am
ஹிஷாமுடின் அம்னோவுக்குத் திரும்பத் தயாராக உள்ளார்
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
