நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்

புத்ராஜெயா:

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் இதனை வலியுறுத்தினார்.

நாட்டின் அமைதியை காப்பதும், பொது ஒழுங்கைப் பேணுவதும் காவல் துறையினரின் முதன்மை கடமை.

இது ஒரு அடிப்படைப் பொறுப்பு.இதில் சமரசம் செய்ய முடியாது.

இருப்பினும், சமீப காலமாக, இன வெறுப்பைக் கக்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாததைக் காண்கிறோம். இதன் விளைவாக நமது நாட்டின் ஒற்றுமைக்கு நேரடியாக அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.

அல்-குர்ஆனை  அவமதித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இச்செயலை புரிந்தவர்கள் மீது வழக்குத் தொடர அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கை பாராட்டத்தக்கது. அத்தகைய நடத்தை கண்டிக்கத்தக்கது என்பதற்கு முன்னுதாரணத்தை அமைக்கிறது.

அதேபோல், இந்து சமூகத்தின் புனித மத அடையாளமான சூலத்திற்கு எதிராக செய்யப்படும் எந்தவொரு செயல்களுக்கும் எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறுவது இனங்களுக்கிடையிலான பதற்றத்தை அதிகரிக்கும்.

நாம் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பராமரிக்க வேண்டும், அதற்கான ஒரே வழி பயமோ அல்லது பாரபட்சமோ இல்லாமல் சட்டத்தை நிலைநிறுத்தச் செயல்படுத்துவதுதான்.

இது குறித்து நேற்று அமைச்சரவையில் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது, ஆனால் அமலாக்க நிறுவனங்கள் அதை பின்பற்ற வேண்டும்.

மத சின்னங்களை அவமதித்ததற்கு காரணமானவர்களைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய காவல்துறை அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.

மலேசியா சட்ட விரோதமான நிலைக்கோ அல்லது இனக் கலவரத்திற்கு வித்திடும் செயல்களுக்கோ வழிவிடக் கூடாது.

பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நாம் கட்டிக் காத்த அமைதியை குலைக்க முயல்பவர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் காவல்துறை இப்போதே செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset