நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாத குழந்தை மரண வழக்கு: பயிற்சி இல்லாமல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்

ஜார்ஜ் டவுன்: 

நான்கு மாத ஆண் குழந்தை மரணம் தொடர்பான விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண் பராமரிப்பாளர்களும் கட்டாயமான பெர்மாத்தா  குழந்தை பராமரிப்பு பாடநெறி (KAP) பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்று மாநில சமூக மேம்பாடு, நலத்துறை, இஸ்லாமியமற்ற விவகாரங்கள் குழுத் தலைவர் லிம் சியூ கிம் தெரிவித்தார்.

“நான்கு மாத ஆண் குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பராமரிப்பாளர்களும் KAP  பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

“மார்ச் 9 சம்பவத்தன்று, செபெராங் ஜெயா மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணிபுரிந்தவர்களில் இந்த இரண்டு பெண்களும் அடங்குவர்.

“விசாரணையில் அந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் சட்டபூர்வமாக செயல்பட்டு, பதிவு தொடர்பான நிபந்தனைகளை பின்பற்றியுள்ளது என்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் வியாழக்கிழமை கோம்தார் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மார்ச் 9 திங்கட்கிழமை அன்று நான்கு மாத குழந்தையான ஹெய்ல் ஹாரித் முஹம்மத் சயஃபீஸ், செபெராங் ஜெயா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள 24 மணி நேர குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பதிலளிக்காத நிலையில் காணப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து மையத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் விசாரணைக்கு உதவுவதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்வில் பணிப்பகுதி மாற்று மேலாண்மை, பணியில் இருந்த பராமரிப்பாளர்களின் KAP பயிற்சி பின்பற்றுதல் தொடர்பாக சில பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

“இந்த பயிற்சியில் கலந்து கொள்ளாதது மிகவும் கடுமையான விஷயம். ஏனெனில் இந்தப் பயிற்சி, குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைக் கையாள தேவையான திறன்களையும் அடிப்படை அறிவையும் வழங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது,” என்றார் அவர்.

இந்தக் குழந்தைகள் பராமரிப்பு மையம் சுமார் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்றும், இதில் பணிபுரியும் ஏழு பராமரிப்பாளர்கள் இன்னும் KAP பயிற்சியை நிறைவு செய்யும் செயல்முறையில் உள்ளனர் என்றும் லிம் தெரிவித்தார்.

மேலும், இந்த மையத்தில் நான்கு வயதுக்குட்பட்ட 44 குழந்தைகள் இருந்தனர்.
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு இந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு எதிராக எந்த அதிகாரப்பூர்வ புகாரும் பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“போலிசார் விசாரணை நடத்துவதற்கான நேரத்தை வழங்குவதற்காக, இந்தக் குறிப்பிட்ட குழந்தைகள் பராமரிப்பு மையம் தற்காலிகமாக செயல்பாட்டை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

மேலும், குழந்தைகளை மற்ற குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் இடமாற்றம் செய்ய பெற்றோருக்கு நலத்துறை உதவி செய்து வருகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset