நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலக எரிசக்தி நெருக்கடி: நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூட வங்கதேச அரசு உத்தரவு

டாக்கா: 

எரிபொருள், மின்சாரத்தைச் சேமிக்கும் அவசர நடவடிக்கையாக, வங்கதேசம் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான பதற்றத்தால் தீவிரமடைந்துள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள், ஆங்கிலப் பள்ளிகள், பயிற்சி மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். திங்கட்கிழமை முதல் அனைத்து கல்விச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக எண்ணெய் சந்தையின் நிலைமையின்மை காரணமாக மின்சார பயன்பாட்டைக் குறைத்து போக்குவரத்து எரிபொருளைச் சேமிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

 பல்கலைக்கழகங்கள் முன்கூட்டியே அய்டில்ஃபித்ரி விடுமுறையைத் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வளாகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. பல துறைகளில் எரிசக்தி தேவையைக் கட்டுப்படுத்தும் அமைச்சரவை முடிவின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைகிறது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

“தற்போதைய உலக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மின்சாரம் எரிபொருளின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று கல்வி அமைச்சகம் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வங்கதேசம் முழுவதும் உள்ள ஆங்கிலப் பள்ளிகளும் பயிற்சி மையங்களும் திங்கட்கிழமை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்தக் காலத்தில் கல்விச் செயல்பாடுகளை நிறுத்துவதன் மூலம், குறிப்பாக நகர்ப்புறங்களில் பகல் நேர மின்சார தேவையைக் கணிசமாக குறைக்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். 

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களால் உலக எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் வங்கதேசத்தின் எரிசக்தி வழங்கல் சங்கிலிக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி நிலைத்தன்மையையும் அடிப்படை சேவைகளின் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்த இந்தச் சேமிப்பு நடவடிக்கைகள் அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

மேலும், கல்வி நிறுவனங்களும் அலுவலகங்களும் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்த வேண்டும் என அரசு வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. இதில் சூரிய வெளிச்சத்தை அதிகமாகப் பயன்படுத்துதல், தேவையற்ற மின்சார சாதனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் போன்றவை அடங்கும்.

இத்தகைய தேவை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் மின்சார துறைக்கு நிவாரணமாக அமையலாம். இதே நேரத்தில், அதிகாரிகள் எரிபொருள் இறக்குமதியை நிலைநிறுத்தவும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று எரிசக்தி ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், எரிசக்தி நெருக்கடி நீடித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை கல்வி நிறுவனங்கள் எவ்வளவு காலம் மூடப்படும் என்பது குறித்து அதிகாரிகள் அறிவிக்கவில்லை. எரிசக்தி வழங்கல் நிலைமை மேம்பட்டால் பெருநாள் விடுமுறைக்கு பிறகு கல்விச் செயல்பாடுகள் வழக்க நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset