நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி

வாஷிங்டன்: 

போதைப்பொருள் கும்பல்களைப் பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரிப்பதில் சிறப்பு பெற்ற அமெரிக்க இராணுவத்தின் தலைமையிலான புதிய பணிக்குழு ஒன்று, மெக்சிகோ போதைப்பொருள் கும்பல் தலைவர் ‘எல் மேன்சோ’ கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தலைவரைப் பற்றிய சேகரிக்கப்பட்ட தகவல்கள், மெக்சிகோ இராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலுக்கு உதவியதாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பல்வேறு அரசு அமைப்புகளை இணைத்து உருவாக்கப்பட்ட ‘கூட்டு இடையமைப்பு போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழு’ (JITF-CC) கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

அமெரிக்கா–மெக்சிகோ எல்லையின் இருபுறங்களிலும் செயல்படும் போதைப்பொருள் கும்பல்களின் வலையமைப்பை வரைபடம் போல் கண்டறிவது இதன் முக்கிய நோக்கமாக விளங்கியது.

இந்தக் குழு மெக்சிகோ அதிகாரிகளுக்கு எந்த தகவல்களை வழங்கியது என்பதை விரிவாக கூறவில்லை. மேலும், அந்தத் தாக்குதல் முழுமையாக மெக்சிகோ இராணுவத்தின் நடவடிக்கையாகும் என்றும், அதில் அமெரிக்க படையினர் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

 ‘எல் மேன்சோ’ குறித்த விரிவான தகவல்கள் மெக்சிகோ அரசுக்கு வழங்கப்பட்டதாக மற்றொரு முன்னாள் அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். அமெரிக்காவின் மெக்சிகோ தொடர்பான இலக்கு பட்டியலில் ‘எல் மேன்சோ’ மிக உயர்ந்த இடத்தில் இருந்ததாக அவர் மேலும் கூறினார்.

மெக்சிகோ அதிகாரிகள், ஜலிஸ்கோ மாநிலத்தில் நடந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மன்னன் நேமெசியோ ஓசெகுவேரா எனப்படும் ‘எல் மேன்சோ’வை சுட்டுக் கொன்றனர்.

இந்த நடவடிக்கை, பல மாநிலங்களில் வன்முறையை ஏற்படுத்தியது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, ஆயுததாரிகள் நெடுஞ்சாலைகளை வழிமறைத்தனர்.
பழிவாங்கும் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா  மெக்சிகோ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

60 வயதான ஓசெகுவேரா, முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) எனப்படும் சக்திவாய்ந்த சர்வதேச குற்ற அமைப்பின் தலைவராக இருந்தார்.

பல ஆண்டுகளாக அவர் கைது செய்யப்படாமல் தப்பித்து வந்தார். அவரை பிடிக்க அல்லது கைது செய்ய உதவும் தகவல்களுக்கு அமெரிக்கா 1.5 கோடி டாலர் (சுமார் RM58 மில்லியன்) பரிசு அறிவித்திருந்தது.

அவரது மரணம், கோகெய்ன், பென்டனில் போன்ற போதைப்பொருட்களை அமெரிக்காவுக்கு கடத்தும் கும்பல்களுக்கு எதிரான மெக்சிகோவின் போராட்டத்தில் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset