நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு டிரம்ப் அதிரடி: உலகம் முழுவதும் 10% சுங்கவரி

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு, அவரின் முந்தைய சுங்க வரிகளில் பெரும்பாலானவற்றை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியானது. இந்தப் புதிய வரி உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சமூக வலைதளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) மூலம், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இந்தப் புதிய வர்த்தகக் கொள்கை தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார்.

இந்தத் திடீர் நடவடிக்கை, உலகளாவிய விநியோகச் சங்கிலி, அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள சுங்க வரிகளுக்கு மேலாக, பிரிவு 122-ன் கீழ் இந்த 10 சதவீத உலகளாவிய வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக, பிரிவு 301, பிற சட்டங்களின் கீழ் பல விசாரணைகளையும் அவர் தொடங்கியுள்ளார்.

“அனைத்து சுங்க வரிகளும் தொடரும். ஆனால் நீதிமன்றத்தால் தவறாக நிராகரிக்கப்பட்ட வரிகளுக்கு பதிலாக, மாற்று வழிகள் தற்போது பயன்படுத்தப்படும்,” என்றும் அவர் கூறினார்.

 அமெரிக்காவின் பெரும்பாலான வர்த்தக கூட்டாளிகளுக்கு எதிராக டிரம்ப் விதித்த ‘பரஸ்பர சுங்க வரிகள்’ அரசியலமைப்புக்கு முரணானவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததாக நேற்று, கியோடோ (Kyodo) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

கீழ்நிலை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் 1977-ஐ பயன்படுத்தி, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு பரவலாக சுங்க வரி விதித்தது, அதிபரின் அதிகார வரம்பை மீறியது என்றும் கூறியது.

இந்தத் தீர்ப்பு 170 பக்கங்களைக் கொண்ட விரிவான தீர்ப்பாக வெளியிடப்பட்டது.

இந்தச் சமீபத்திய தீர்ப்பின் காரணமாக, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள், முன்பு மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

மலேசியாவும் அமெரிக்காவும், 2025 அக்டோபர் 26 அன்று பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (ART) ஒன்றை கையெழுத்திட்டிருந்தன. – ராய்ட்டர்ஸ்

சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset