நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நூற்றுக்கணக்கான வனவிலங்கு உறுப்புகள் பறிமுதல்: வெளிநாட்டவர்களுக்குக் கடும் தண்டனை

குவந்தான்:

அனுமதி இல்லாமல் சுமார் 1,000 வனவிலங்கு உறுப்புகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், மூன்று வியட்னாம் குடிமக்களுக்கு இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 15 மாதங்கள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கில் சகோதரர்களான புயி தி ந்கான் (56), புயி வான் நோய் (48), புயி வான் ஆன் (38) ஆகிய மூவரையும் குற்றவாளிகள் என நீதிபதி மைமூனா ஆயித் தீர்ப்பளித்தார்.

மேலும், மூவருக்கும் மொத்தமாக RM128.9 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால், கூடுதலாக 8 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையில், மூவரும் சுமார் 1,000 வனவிலங்கு உறுப்புகளை வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதில் பாங்கோலின், கரடி, வங்காளப் புலி, கரும்புலி, காட்டுச் செம்மறி, காட்டுப் பூனை, ஆசிய யானை, காட்டுப் பன்றி, ஓநாய், பெரிய முள்ளம்பன்றி, மான், பாம்பு போன்ற பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் உடலுறுப்புகள் அடங்கும். இவை அனைத்தும் 2010 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (சட்டம் 716) முதல் அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த வழக்கு, சட்டம் 716 இன் பிரிவு 68(1)(b), குற்றவியல் சட்டத்தின் பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டது. மேலும், 2022 திருத்தச் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்காக்கள் துறை (PERHILITAN) சார்பில் ஆஜரான துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் அமனினா முஹம்மது அனுவார், இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

“நாட்டின் மதிப்பற்ற இயற்கை வளங்களைப் பாதிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான வனவிலங்கு பகுதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ ஜஹர்மான் சைனால் அபிதின், சம்பந்தப்பட்டவர்களுக்குக் இதற்கு முன் குற்றப் பதிவு இல்லை, விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர், சட்டப்படி நாட்டில் நுழைந்துள்ளனர், தங்கள் தவறுக்கு வருந்துகின்றனர், மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset