நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்கள் கொள்ளை: 12 போலீசார் கைது

காஜாங்: 

சுமார் RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்களைக் கொள்ளையடித்ததாகச் சந்தேகத்தின் பேரில், புக்கிட் அமான் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவு (JSJK) அதிகாரிகள் நால்வர் உட்பட 12 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், ஒரு உதவி கண்காணிப்பாளர் (Assistant Superintendent), ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சார்ஜன், ஆறு கார்ப்பரல்கள், இரண்டு லான்ஸ் கார்ப்பரல்கள், ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குவர். இவர்களின் வயது 24 முதல் 47 வரை ஆகும்.

இவர்கள் கடந்த இரண்டு நாட்களில், மாவட்ட காவல் தலைமையகத்தின் சிறப்பு குழுவினரால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

31 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த சந்தை ஆய்வாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரும் அவரது ஏழு நண்பர்களும் காஜாங்கில் பாதுகாப்பு வசதியுடன் கூடிய வாடகை பங்களாவில் தங்கியிருந்த போது, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, விடுதலை பெறுவதற்காகத் தங்களைக் கிரிப்டோ நாணயங்களை மாற்றும்படி கட்டாயப்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார்.

 மாவட்ட வர்த்தகக் குற்றப் பிரிவு அதிகாரிகள், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 11.10 மணிக்கு அந்த இரு மாடி வீட்டைச் சோதனை செய்தனர். அங்கு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் ‘ஆப் தெரிங்’ (Op Taring) எனப்படும் மோசடி தடுப்பு நடவடிக்கையின் கீழ் செயல்பட்டதாகவும், கம்போடியா சிண்டிகேட்டுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்ததாகவும் கூறப்பட்டது.

இருப்பினும், மின்னணு சாதனங்கள், பாஸ்போர்ட்களை ஆய்வு செய்தபோது எந்த குற்றச் சான்றுகளும் கிடைக்கவில்லை. மேலும், அவர்கள் கம்போடியா சென்றதாகவும் எந்த பதிவும் இல்லை.

அந்தக் குழுவினர் சீனாவை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் சந்தை ஆய்வாளர்களாகப் பணியாற்றுவதாகத் தெரிவித்தனர்.

எனினும், RM4 லட்சம் பணம் செலுத்தாவிட்டால் குடிநுழைவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அந்தக் குழுவில் மூன்று பெண்கள் இருந்ததால் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட ஒரு நபர், சீனாவில் உள்ள தனது நிறுவனத்தை தொடர்புகொண்டார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சந்தேகநபர்கள் 50,000 USDT (டெதர் கிரிப்டோ நாணயம்) பெற ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்தத் தொகை சந்தேகநபர்கள் கொடுத்த கிரிப்டோ வாலட் முகவரிக்கு அனுப்பப்பட்டது.

பணம் பரிமாற்றம் உறுதி செய்யப்பட்ட பிறகே போலீசார் அந்த இடத்தை விட்டு சென்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு அவர்கள் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து 12 சந்தேகநபர்களும் அந்த வீட்டில் நடந்த சோதனை நேரத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த வழக்கு குழு கொள்ளை குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 395-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

கிரிப்டோ பரிமாற்றங்களைக் கண்டறிவதற்காக, காஜாங , பண்டார் பாரு பாங்கி நீதிமன்றங்களில் தடுப்பு காவல் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset