நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நால்வரை கொலை செய்து தற்கொலை செய்துகொண்டவர்: ‘அவர் நல்ல மனிதர், நட்பானவர்’ – அண்டைவீட்டினர் உருக்கம்

குவந்தான்: 

செவ்வாய்க்கிழமை தாமான் செராத்திங் டாமாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது குடும்ப உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்து, பின்னர் தன்னையே காயப்படுத்திக் கொண்டு உயிரிழந்ததாக நம்பப்படும் நபர், அண்டைவாசிகளின் பார்வையில் நல்லவரும் நட்பானவருமாக இருந்துள்ளார்.

அந்தக் குடும்பத்தை நீண்ட காலமாக அறிந்தபோதிலும், சந்தேக நபரின் நடத்தை அல்லது குணத்தில் எந்த சந்தேகத்திற்குரிய மாற்றமும் காணவில்லை என அந்தப் பகுதியில் வசிக்கும் சாரிபா ஜாயா (60) கூறியுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் குடும்பத்துடன் வாழத் தொடங்கிய அந்த நபர், அண்டைவாசிகளுடன் அடிக்கடி பேசிக் கொண்டு, நட்பாகப் பழகி வந்ததாக அவர் தெரிவித்தார்.

“அவர் என்னையும் என் கணவரையும் ‘மொக்’, ‘அபோ’ என்று அழைப்பார். எப்போது சந்தித்தாலும் நிச்சயம் வணக்கம் சொல்லுவார்.

“கடந்த ஒரு மாதமாக இங்கு குடும்பத்துடன் வசித்தபோதும் அவர் எந்தவிதமான மாற்றத்தையும் காட்டவில்லை. சாதாரணமாகவே இருந்தார்,” என்று அவர் கூறினார்.

திங்கட்கிழமை காலை சந்தேக நபரின் தாயைக் கடைசியாக வீட்டின் முன்பாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது பார்த்ததாகத் தெரிவித்தார்.

இருப்பினும், அந்தக் காலை நேரத்தில் யாரும் அலறுவது அல்லது உதவி கேட்பது போன்ற சந்தேகத்திற்குரிய சத்தங்கள் எதையும் அவர் கேட்கவில்லை என தெரிவித்தார்.

“காலை 6 மணியளவில் கனமழை பெய்ததால் நானும் என் கணவரும் விழித்திருந்தோம்.

“எதுவும் சந்தேகமாகத் தோன்றவில்லை. பின்னர், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவசரமாக வீட்டைவிட்டு வெளியே வந்து ஏதோ சொல்ல முயன்றதைப் பார்த்தோம்.

“அப்போதும் ஏதாவது மோசமான சம்பவம் நடந்திருக்கிறது என்று எங்களுக்கு தோன்றவில்லை. என் கணவர் காலை உணவு வாங்கச் சென்றார், நான் கோழிகளுக்கு உணவு போட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றேன்,” என்று கடந்த 20 ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் அவர் கூறினார்.

முன்னதாக, தாமன் செராத்திங் டாமாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்தத் துயரமானச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாகச் செய்தி வெளியாகிருந்தது.

32 வயதான அந்தச் சந்தேக நபர், தனது மனைவி, தாய், இரண்டு மகள்களைக் கொலை செய்துவிட்டு, பின்னர் தன்னையும் காயப்படுத்திக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

காலை 7 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 55 வயதுடைய தாய், 28 வயதுடைய மருமகள் மூன்று, நான்கு வயதுடைய இரண்டு பேத்திகள் உயிரிழந்தனர்.

அந்த வீட்டில் வசித்து வந்த 15 வயது சிறுவன் மூலம் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகப் பஹாங் மாநில காவல் துறை தலைவர், டத்தோக் ஸ்ரீ யாஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset