நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீயில் பாய்ந்து குடும்பத்தைக் காப்பாற்றிய தந்தை: முகம், உடலில் தீக்காயங்கள்

கோத்தா பெலூட்: 

தீ விபத்தின்போது, தனது மனைவியையும் நான்கு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காகத் தீயில் பாய்ந்து சென்றதால் தந்தை ஒருவர் முகத்திலும் உடலிலும் தீக்காயம் அடைந்துள்ளார்.

32 வயதான அந்த நபர், தீ வேகமாக பரவுவதற்கு முன்பு தனது குடும்பத்தினரை வெளியே கொண்டு வர முயற்சித்தபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவ இடத்தில் உள்ள ஒன்பது கடைகள் கொண்ட வரிசை கட்டிடத்தின் பெரும்பகுதி தீயால் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

32 வயதான அவரது மனைவியும் முறையே 11, 8, 5, ஒரு மாதமான அவர்களுடைய நான்கு குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

காலை 5.32 மணியளவில் தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கோத்தா பெலூட் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் எல்கே பாக்குக் தெரிவித்தார்.

அதன்பின், ஏழு தீயணைப்பு வீரர்கள், ஒரு தீ மீட்பு வாகனம் (FRT), ஒரு அவசர மருத்துவ மீட்பு வாகனம் (EMRS) உடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். சம்பவ இடம் தீயணைப்பு நிலையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

அங்கு சென்றபோது, 57 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள ஒன்பது கடைகள் கொண்ட கட்டிடம் 95 சதவீதம் தீயில் எரிந்திருந்ததைக் கண்டனர்.

61 மீட்டர் நீளமுள்ள இரண்டு நீர்க் குழாய்கள் மூலம் தீயணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள், அருகிலுள்ள தீயணைப்பு குழாய்களிலிருந்து நீர் பெறப்பட்டது.

இருப்பினும், பள்ளி அருகிலிருந்த தீயணைப்பு குழாயில் போதிய நீரழுத்தம் இல்லாததால், தண்ணீர் நிரப்புவதற்காகத் தீயணைப்பு குழு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'டேக் வேலி' பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது என மேலும் பேசிய அவர் கூறினார்.

அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் EMRS, மலேசிய சுகாதார அமைச்சின் குழுவால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. தீக்காயமடைந்த தந்தை மேல்சிகிச்சைக்காக கோத்தா பெலூட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

காலை 7.13 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள், சீரமைப்பு பணிகளுக்குப் பிறகு காலை 10.55 மணிக்கு தீயணைக்கும் நடவடிக்கை முழுமையாக முடிவடைந்தது.

தீ விபத்துக்கான காரணம், இழப்புத் தொகை குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset