செய்திகள் மலேசியா
கொலை, கொள்ளை சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட வன்முறை கும்பல் முற்றாக முடக்கம்: 17 பேர் கைது, 15 பேர் தலைமறைவு
கோலாலம்பூர்:
கெடாவிலும், பினாங்கிலும் நடைபெற்ற பல்வேறு கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு காரணமாக இருந்த ஒரு வன்முறை கும்பலை காவல்துறை முற்றாக முடக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, சமீபத்தில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஏழு பேர் உட்பட, மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 முதல் 42 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையும், கெடா காவல்துறையும் இணைந்து நடத்திய ‘ஆப் மூன்று’ (Op Tiga) நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
கூட்டாட்சி குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் கூறுகையில், ‘கேங் 35’ என அழைக்கப்படும் இந்த கும்பல், முன்பு ‘கேங் ரூசா பாய்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்ததாக தெரிவித்தார். இந்த கும்பல் சுங்கை பெட்டானி, கூலிம், பினாங்கின் சில பகுதிகளில் தனது குற்றச் செயல்களை மேற்கொண்டு வந்துள்ளது.
இந்த கும்பலை, 2020 முதல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும், 36 வயதுடைய ஜி.ஆர். ரமேஷ் என்ற நபர் தலைமையேற்று நடத்தி வந்ததாகவும் அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்ட அனைவருக்கும், கொலை, ஆயுதத்துடன் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களுக்கான குற்றப் பதிவுகள் உள்ளன,” என குமார் தெரிவித்தார். மேலும், இவர்களில் ஏழு பேர், அமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களாக இருந்ததற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து, இந்த ஆண்டு ஜனவரியில் விடுவிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
2024 முதல், குறைந்தது இரண்டு கொலை சம்பவங்களுடன் இந்த கும்பல் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 பேரும், பாதுகாப்பு குற்றங்களின் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் (SOSMA) கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இன்னும் தலைமறைவாக உள்ள 15 கும்பல் உறுப்பினர்களை காவல்துறை தேடி வருவதாகவும், அவர்கள் நாட்டிற்குள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் டத்தோ குமார் கூறினார்.
“அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவோம். கைது நடவடிக்கைகளின் மூலம், இந்த கும்பலின் செயல்பாடுகளை முற்றாக முடக்கியுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 5:02 pm
புடி95 உதவியைப் பெற பிறரின் அடையாள அட்டையைப் பயன்படுத்திய நபருக்கு RM2,000 அபராதம்
December 29, 2025, 4:42 pm
ஜனவரி 1 முதல் 150 நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு: பிரதமர் அன்வார்
December 29, 2025, 4:38 pm
சாலையை கடந்த காட்டு மாடு மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி
December 29, 2025, 1:07 pm
