நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம் 

மும்பை:

பண மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்குச் சொந்தமான மேலும் ரூ. 1,400 கோடி மதிப்பிலான சொத்துகளை இந்திய அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, இவருக்குச் சொந்தமான ரூ. 7,500 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிதி நிறுவனம் (ஆா்ஹெச்எஃப்எல்), ரிலையன்ஸ் வா்த்தகக் கடன் நிதி நிறுவனம் (ஆா்சிஎஃப்எல்) ஆகிய நிறுவனங்களின் மூலம் ஈட்டப்பட்ட பொது நிதியில் பண முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

கடந்த 2017-2019 வரை ஆா்ஹெச்எஃப் நிறுவனத்தில் ரூ.2,965 கோடியும் ஆா்சிஎஃப் நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் எஸ் வங்கி முதலீடு செய்தது. ஆனால், இந்த இரண்டு தொகையும் 2019-இல் வாராக் கடனாக மாறியது.

செபியின் கட்டுப்பாடுகளால் சட்டரீதியாக ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) மூலம் ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடுகள் மேற்கொள்ள முடியாது. அதன் காரணமாக, எஸ் வங்கியைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி மேற்கூறிய இரு நிறுவனங்களுக்கும் கடன் வழங்கியிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. 

இதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, அனில் அம்பானிக்குச் சொந்தமான மொத்தம் ரூ.9,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset