நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

போராளியான ராகுல் காந்தி

'சாதுவான ராகுல்காந்தி தற்போது போராளியாக மாறிக் கொண்டிருக்கிறார்' 

" இனி எதிர் கட்சிகளின் ஒரே எதிரி தேர்தல் ஆணையம் தான்" என்று அறிவித்துள்ளார் ராகுல் காந்தி.  

எப்போது பாஜகவானது அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட தன்னாட்சி கொண்ட  தேர்தல் ஆணையத்திற்கு தன் அடியாட்களை ஆணையர்களாக நியமித்து தேர்தல் தீர்ப்புகளையே மாற்றத் துணிந்ததோ..,  அப்போதே ஜனநாயகம் செத்துவிட்டது.

ஏற்கனவே அமலாக்கத் துறை, சி.பி.ஐ, வருமான வரித் துறை ஆகியவற்றை கட்சிக் கிளையாக மாற்றிவிட்ட பாஜக ஆட்சியாளர்கள், தேர்தல் ஆணையத்தின் சார்பற்ற சம நிலையையும் சிதைத்து விட்டார்கள்.

இது வரை ஒரு அரசியல் கட்சி பிறிதொரு அரசியல் கட்சியை எதிரியாக பார்த்து நடந்து கொண்டிருந்தது  இயல்பான ஜனநாயக அரசியல்!  அதற்காக ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணி காண்பதும் இயல்பு. ஆனால், பாஜகவோ தேர்தல் ஆணையத்தையே தன் கூட்டணியில் இணைத்துக் கொண்டது தான் ஆகப் பெரிய அவலம்!

எனவே, ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தை நோக்கித் தீப்பிழம்பாக பேசியுள்ளது காலத்தின் தேவையாகும்.

''இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இப்போது சாக்குப்போக்கு சொல்லக்கூடாது. அவர்கள் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஆகும்.

சும்மா இல்லை. நாங்கள் ஒரு நாற்பது பேர் கடந்த ஆறுமாதமாக உழைத்து இவற்றை கண்டுபிடித்துள்ளோம். இடைவிடாமல் வேலை செய்து, பெயர்கள், முகவரிகள் மற்றும் படங்களை ஒப்பிட்டுப் பார்த்துள்ளோம்.

ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
 
தொகுதியில் இல்லாத போலி வாக்காளர்கள், 

இல்லவே இல்லாத போலி முகவரி, 

ஒரே முகவரியில் தாறுமாக சேர்க்கப்பட்டுள்ள அதிக வாக்காளர்கள்,
 
தவறான புகைப்படங்கள், 

படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது 

ஆகிய ஐந்து வகை தகிடு தத்தங்கள் மூலம் தேர்தல் வெற்றியை அபகரிக்கப் பார்க்கிறார்கள்.

15 தொகுதிகளில் மோசடி செய்யாவிட்டால் மோடி பிரதமர் ஆகி இருக்கமாட்டார்.

கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள்..’’ என்கிறார் ராகுல்காந்தி.

இப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தை நாடும், மக்களும் எப்படி எதிர்கொள்வது என்பது தான் தற்போது நம் முன் உள்ள பிரதான சவாலாகும். கட்சிப் பாகுபாடின்றி வாக்காளர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். 

நேர்மையான தேர்தல் நடந்து யார் வெற்றி பெற்றாலும் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், தேர்தல் வெற்றியை திருட  ஒரு போதும் நாம் அனுமதிக்கக் கூடாது.

- சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset