நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் $3 பில்லியன் பணமோசடி வழக்கில் சிக்கிய 4 சட்ட நிறுவனங்கள், வழக்கறிஞர் ஒருவர் மீது சட்ட அமைச்சு நடவடிக்கை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துகளை வாங்குவதற்குச் சட்டச் சேவை வழங்கிய நான்கு சட்ட நிறுவனங்கள் மீதும் வழக்கறிஞர் ஒருவர் மீதும் சட்ட அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சு, செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வெளியிட்ட செய்திக்குறிப்பில், சட்டச் சேவைத் துறை இயக்குநர் இதன் தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த பணமோசடி குறித்த வழக்கில் தொடர்புடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்தகைய சொத்துகளை வாங்குவதற்கான சட்டச் சேவைகள் வழங்கிய 24 சட்ட நிறுவனங்கள் மீது சட்டச் சேவைத் துறை இயக்குநர் விசாரணை மேற்கொண்டதாகவும் அவற்றில் 11 விசாரணைகள் நிறைவுபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிவில், இரு சட்ட நிறுவனங்களுக்கு முறையே $30,000, $100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நிறுவனத்துக்கு $70,000 அபராதம் விதிப்பது தொடர்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதன் தொடர்பில் நிறுவனம் எழுத்துபூர்வமாக அளிக்கும் விளக்கத்துக்குப் பிறகு சட்ட அமைச்சு அபராத உத்தரவைப் பிறப்பிக்கும் என்றும் கூறப்பட்டது.

நான்காவது நிறுவனத்துக்குத் தனிப்பட்ட முறையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர் ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏழு சட்ட நிறுவனங்கள் மீது கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று சட்டச் சேவைத் துறை இயக்குநர் முடிவெடுத்துள்ளார்.

மற்ற 13 சட்ட நிறுவனங்கள் மீதான விசாரணை முடிவுகளைப் பரிசீலித்து அவர் பின்னர் முடிவுகளை அறிவிப்பார் என்று சட்ட அமைச்சு கூறியது.

சட்ட நிறுவனங்கள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் மோசடி தொடர்பான விதிமுறைகளை மீறியதாக நிரூபிக்கப்பட்டால், அவற்றின் உரிமம் தொடர்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அவை எதிர்கொள்ள நேரிடும் என்று அமைச்சு சொன்னது.

வழக்கறிஞர் ஒருவர் இத்தகைய விதிமுறைகளை மீறியது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அபராதம், வழக்கறிஞராகச் செயல்படத் தற்காலிகத் தடை அல்லது நிரந்தரத் தடை போன்றவற்றை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்பட்டது.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய பணமோசடி வழக்கான இந்த $3 பில்லியன் மோசடி வழக்கில், 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி, வெளிநாட்டினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆதாரம்: தமிழ்முரசு 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset