நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களுக்காக திரைக்குப் பின்னால் பணியாற்றியதாக கூறும் நூருல் இசா அதை நிரூபிக்க வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன் சவால்

கோலாலம்பூர்:

இந்தியர்களுக்காகப் பணியாற்றியதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள் என நூருல் இசாவுக்கு மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் சவால் விடுத்துள்ளார்.

நாட்டில் இந்திய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க திரைக்குப் பின்னால் பணியாற்றுவதாக கெஅடிலான் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் கூறியுள்ளார்.

இந்திய சமுதாயத்தின் பிரச்சினைக்கு பணியாற்றி இருந்தால் நல்லது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும்.

மேலும் கெஅடிலான் துணைத் தலைவராக இருக்கும் நூருல் இசா அமைதியாக வேலை செய்யத் தேவையில்லை.

காரணம் அவரது கட்சி ஆளும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்த அதிகாரத்துடன் அவர் சமூகத்தின் பல பிரச்சினைகளை நேரடியாகவே தீர்க்கலாம் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

நூருல் இசா  மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

ஆனால் அவர் திரைக்குப் பின்னால் அணுகுமுறை மூலம் தீர்க்க உதவிய அனைத்து பிரச்சினைகளையும் பட்டியலிட வேண்டும்.

தேசிய முன்னணியில் ஆட்சியின் போது மஇகா செய்த தவறு இது தான். இந்திய மலேசிய சமூகத்திற்கான எங்கள் கோரிக்கைகளை நாங்கள் அரசாங்கத்திடம் விளம்பரப்படுத்தவில்லை.

13ஆவது மலேசியத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்கு என்ன காத்திருக்கிறது என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்? நாங்கள் மீண்டும் மீண்டும் ஒதுக்கப்பட விரும்பவில்லை.

பல்வேறு அம்சங்களில் முன்னேற சமூகத்திற்கு நல்ல ஆக்கபூர்வமான திட்டங்கள் தேவை என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

முன்னதாக 13ஆவது மலேசிய திட்டத்தில் இணைக்கக் கோரி மஇகா  தமிழ்ப்பள்ளிகளுக்கு வெளிப்படையான நிதி, மெட்ரிகுலேசன் இடங்களை அதிகரித்தல், மலிவு விலையிலான வீடமைப்புத் திட்டம், ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

மேலும் மித்ரா நிதியை நெறிப்படுத்தப்பட்ட, வெளிப்படையான முறையில் வழங்குவதற்கான கோரிக்கையும் இதில் அடங்கும். இதனால் அந்த திட்டங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் சரியான முறையில் மக்களைச் சென்றடையும்.

இப்படி பல திட்டங்களை மஇகா பரிந்துரைகளாக முன்வைத்துள்ளது.

மேலும் அனைத்து முயற்சிகளையும் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், திறம்பட வழங்குவதை வழிநடத்தவும் ஒரு மையப்படுத்தப்பட்ட இந்திய சமூக மேம்பாட்டு திட்டவரைவை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மஇகா எதற்காகப் போராடுகிறது என்பதை அறிய சமூகத்திற்கு உரிமை உண்டு. இதனால் பரிந்துரைகளை நாங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளோம்.

இக் கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் எங்களை மதிப்பீடு செய்யட்டும். மேலும் விநியோகத்திற்கு அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்யட்டும்.

எனவே நூருல் இசா உண்மையிலேயே சமூகத்திற்காக வேலை செய்திருந்தால், மெட்ரிகுலேசன் பிரச்சினையில் என்ன செய்யப்பட்டது அல்லது முன்மொழியப்பட்டுள்ளது என்பதை அவர்  வெளியிட வேண்டும்.

இதன் மூலம்  அவரின் அமைதியான முயற்சிகள் உண்மையானதா அல்லது புலம்பலாக மாறி உள்ளதா என்பதை இந்திய சமூகம் தாங்களாகவே பார்க்கட்டும் என்று  டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset