நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய முஸ்லிம் சமுதாயத்தை வழிநடத்தும் பெர்மிம் பேரவை அடுத்த கட்டத்துக்குத் தயாராகிறது:  ஷேக் பரிதுத்தீன்

ஜார்ஜ்டவுன்:

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய முஸ்லிம் சமுதாயத்தை வழிநடத்தும் பெர்மிம் பேரவை புதிய கட்டத்துக்குத் தயாராகி வருகிறது என்று பெர்மிம் தேசியத் தலைவர் ஷேக் ஃபரிதுத்தீன் கூறினார்.

மலேசியா முழுவதும் உள்ள இந்திய முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பெர்மிம் பேரவை அதன் அவசர பொதுக்குழு கூட்டத்தை பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள முஸ்லிம் லீக் கட்டிடத்தில்  நடத்தியது.

இந்த கூட்டத்தில் பினாங்கு, கெடா, பேரா, கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, கிளந்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த அவசர கூட்டம் பெர்மிம் சட்டத்தை மறுஆய்வு செய்யும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மறுஆய்வு குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு, அதன் நன்மை தீமைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

இறுதியில், கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல்களுக்குப் பிறகு, தேவையான திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

இக்கூட்டத்தை பெர்மிமை சேர்ந்த டத்தின் சப்ரீனா தொகுத்து வழங்கினார்கள். கூட்டத் தொடக்கத்தில், பினாங்கு முஸ்லிம் லீக் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜா நஜ்முதீன், வருகைதந்த பிரதிநிதிகளை வரவேற்றார்.

பெர்மிம் பொதுச்செயலாளர் ஆதம் மாலிக் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலை சுருக்கமாக விளக்கினார்.

பெர்மிம் தலைவர்  ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன் அரசியலமைப்பின் மறுஆய்வை விளக்கி, விவாதத்திற்குத் தாராளமான வாய்ப்புகளை வழங்கினார்.

பங்கேற்பாளர்கள் பலரும் தங்களது கருத்துகளை ஆழமாக பகிர்ந்து, கருத்து பரிமாற்றத்துக்குப் பிறகு சில முக்கிய திருத்தங்கள் ஏற்கப்பட்டன.

கெபிமா அமைப்பின் பிரதிநிதியாக கலந்துகொண்ட கெபிமா முன்னாள் தலைவர் டத்தோ ஒஸ்மான் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். பெர்மிம் அரசியலமைப்பின் நகலை கூட்டத்திலேயே கிழித்து, தங்களது அமைப்பு பெர்மிமிலிருந்து விலகுவதாக அறிவித்து, வெளியேறினார்.

பெர்மிமின் தலைவர் தனது நன்றியுரையில், 1973ஆம் ஆண்டு, இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்காக பல இந்திய முஸ்லிம் தலைவர்களும், தன்னார்வலர்களாலும் உருவாக்கப்பட்ட பெர்மிம், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மலேசியா முழுவதும் உள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தின் கல்வி, தொழில் முனைவோர் வளர்ச்சி,  சமுதாய அறைகூவல்களை தீர்க்க பல்வேறு வழிகளில் பாடுபட்டு வருகிறது.

தற்போது வரை 10 தலைவர்கள் பெர்மிம் தலைமைப் பொறுப்பை வகித்து, அமைப்பின் நேர்மையான கொள்கையின் அடிப்படையில் தங்களது செயல்திறனை நிரூபித்துள்ளனர்.

பெர்மிம் பேரவையின் பெரும்பாலான கூட்டங்களில், 70%க்கும் மேற்பட்ட உறுப்பினர் அமைப்புகள் பங்கேற்று தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துகின்றனர்.

பெர்மிம், நீதியின் அடிப்படையிலும் ஜனநாயக அடிப்படையிலும்  பாரபட்சமின்றி செயல்படுவதையும், சமூகத்தின் தேவைப்பட்ட இடங்களில் உதவி செய்யும் முன்னோடியான அமைப்பாக திகழ்வதும் குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset