
செய்திகள் வணிகம்
சிங்கப்பூரில் தானியக்க இயந்திர மனிதக் கருவிகளைப் பயன்படுத்தும் முதல் உல்லாச விடுதி மரீனா பே சேண்ட்ஸ்
சிங்கப்பூர்:
ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் நேரடித் தொடர்புகொள்ளாத இடங்களில் விநியோகங்களைக் கையாளத் தானியக்க இயந்திர மனிதக் கருவிகளைப் பயன்படுத்தும் முதல் சிங்கப்பூர் உல்லாச விடுதியாக மரீனா பே சேண்ட்ஸ் விளங்குகிறது.
‘ஏஎம்ஆர்’ (Autonomous mobile robot) என்றழைக்கப்படும் 12 தானியக்க விநியோக இயந்திரங்களை நாள் முழுதும் தொழிற்சாலைகளிலும் கிடங்குகளிலும் மரீனா பே சேண்ட்ஸ் பயன்படுத்துகிறது.
இந்த முயற்சி ஊழியர்களின் தேவையை 30 விழுக்காடு குறைக்கிறது.
ஒவ்வொரு இயந்திரமும் அதிகபட்சமாக 300 கிலோ எடையைச் சுமப்பதோடு, நிரலாக்கம் செய்யப்பட்ட 20 பாதைகளுக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்திற்கு 84 மீட்டர் தொலைவு பயணம் செய்கிறது.
2019க்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையே விநியோகங்களின் எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரித்து, ஒவ்வொரு நாளும் 80 பாதைகளில் 200 கையேடுகளை விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், தொழில்நுட்பத்தின் உதவியை நாடியது மரீனா பே சேண்ட்ஸ்.
அதன் முதல் நான்கு தானியக்க இயந்திர மனிதக் கருவிகளை 2024 மார்ச்சிலும், அடுத்த எட்டைச் செப்டம்பரிலும் அறிமுகப்படுத்திய மரீனா பே சேண்ட்ஸ், மேலும் ஐந்து இயந்திரங்களை இந்த ஆண்டு மத்தியில் சேவையில் இணைக்கவுள்ளது.
இதனால் பணியாளர்களின் தேவை குறைவதால், கொள்முதல், விநியோகத் தொடர் பிரிவுகளில் பணிபுரிபவர்கள் கையிருப்புப் பட்டியல் நிர்வாகம் (Inventory Management), ஏஎம்ஆர் (AMR) செயல்பாட்டுப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டனர்.
ஒரு பெரிய தங்குவிடுதியைச் சீராக நடத்த, தொழிலாளர் நிர்வாகத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டினார் மரீனா பே சேண்ட்சின் கொள்முதல், விநியோகத் தொடர்ப் பிரிவுத் துணைத் தலைவர் ஷிரஜித் பிரதாபன்.
“தொடர்ந்து சிங்கப்பூரில் முதலீடு செய்வதால், அதிக அளவில் புத்தாக்கக் கருவிகளைப் பயன்படுத்தி, பணியிடச் செயல்முறைகளை மேம்படுத்துவோம். உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த விநியோகிப்பாளர்களோடு இணைந்து இதைச் செய்வோம்,” என்றார் அவர்.
தானியக்கமாக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட பணிச் செயல்முறைகளுள், சீருடை மேலாண்மை, உணவுக் கழிவைக் கையாளுதல் ஆகியவையும் அடங்கும்.
மரீனா பே சேண்ட்ஸ் உல்லாச விடுதியின் சீருடைக் கட்டமைப்பு, 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சீருடைகளை நிர்வகிக்கிறது.
அதோடு, உணவுக் கழிவுகளை உள்ளூர்ப் பண்ணையின் மீன்களுக்கான தீவனமாக மாற்றும் தானியங்கிச் செயல்முறையின் முன்னோடித் திட்டத்தையும் மரீனா பே சேண்ட்ஸ் முடித்துள்ளது.
மேலும், மீன் கழிவுகளும் நுண்ணுயிரிகளால் நைட்ரேட்டாக மாற்றப்பட்டு, காய்கறிகளுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டும் இத்தொழில்நுட்பம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு, அதன் தயாரிப்புகள் உணவகங்களிலும் பேரங்காடிகளிலும் விற்கப்படுகின்றன.
இதன் மூலம் 2024ஆம் ஆண்டில் 65 விழுக்காட்டு உணவுக் கழிவுகளைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த முடிந்தது என்றும் இந்த ஆண்டிறுதிக்குள் அதை 100 விழுக்காடாக்குவதே நோக்கம் என்றும் உல்லாச விடுதியின் நீடித்த நிலைத்தன்மைப் பிரிவின் நிர்வாக இயக்குநர் மெரிடித் பியுஜீன் தெரிவித்தார்.
ஆதாரம்: தமிழ் முரசு
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm