நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திறமை, உழைப்பு, விசுவாசம் இருந்தால் யாரும் மஇகாவின் தலைமைப் பொறுப்பை அடையலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் பழனிவேல்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

திறமை, உழைப்பு, விசுவாசம் இருந்தால் யாரும் மஇகாவின் தலைமைப் பொறுப்பை அடையலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் டத்தோஶ்ரீ பழனிவேல்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் இதனை தெரிவித்தார்.

அமைச்சர், துணையமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலப் பொறுப்புகளை வகித்து, மஇகாவில் படிப்படியாக முன்னேறி இறுதியில் கட்சியின் 8ஆவது தேசியத் தலைவராக பொறுப்பேற்றார்.

குறிப்பாக துன் ச.சாமிவேலுவுக்குப் பின்னர் டத்தோஶ்ரீ பழனிவேல் கட்சிக்கு தலைமையேற்றார்.

கடந்த காலங்களில் அவருடன் இணைந்து அரசியல் பயணத்தில் பாடுபட்ட பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கும், நண்பர்களுக்கும், மஇகா உறுப்பினர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரின் இறுதிக் காலத்தில் அவரின் உடல் நலக் குறைவினால் அவருடனான தொடர்புகள் பெருமளவில் குறைந்துவிட்டன என்றாலும் அவர் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்புகளையும், எனக்கும் சில அரசியல் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர் அவர் என்ற முறையிலும் அவரின் நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை.

பல்கலைக் கழகப் பட்டதாரியான அவர் முதலில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் ஆய்வு அதிகாரியாக பணியாற்றினார்.

அதன் பின்னர் பெர்னாமா நிறுவனத்தின் பத்திரிகையாளராகவும் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.  அவரின் ஊடக வியூக ஆற்றலும், அரசியல் வியூகங்களும் தான் அமரர் துன் சாமிவேலு அவரைத் தன் ஊடகச் செயலாளராக நியமித்தார்.

திறமை, உழைப்பு, ஆகியவை ஒருங்கிணைந்து கட்சிக்கும் கட்சித் தலைமைத்துவத்திற்கும் என்றும் விசுவாசமாக இருந்தால், யாராக இருந்தாலும், எந்த அரசியல் பின்புலமுமின்றி கட்சியின் தேசியத் தலைவராகவே உயரலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் பழனிவேல்.

துன் சாமிவேலு பதவி விலகும் தருணம் வந்தபோது, அவரே தனக்கு வாரிசாக அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர் பழனிவேல்.

துன் சாமிவேலுக்கு பின் தேசியத் தலைவரானதும் 13ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவை வழிநடத்திய அவர்,  தனக்கே உரிய பாணியில் சில முன்னேற்றங்களை கட்சிக்குக் கொண்டு வந்தார்.

தன் பதவிக் காலத்தில் கட்சியை இயன்றவரையில் சிறப்பாக வழி நடத்தினார் என்பதை மறுப்பதற்கில்லை.

அன்னாரைப் பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியுறவும் அனைவருடன் இணைந்து நானும் பிரார்த்திக்கிறேன் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset