நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி ஆலயங்கள் கட்ட முடியாது: சிவநேசன் எச்சரிக்கை

ஈப்போ: 

இனிவரும் காலங்களில் பேராக் மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி ஆலயங்கள் நிறுவக்கூடாது. அத்துடன், சொந்த நிலத்தில் ஆலயம் நிறுவ வேண்டுமென்றாலும் அராசங்கத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை பேராக் மாநில அரசாங்கம் முதன்முதலில் வெளியிட்டுள்ளதாக பேராக் மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

"ஹராம்" ஆலயங்கள் என்ற வார்த்தையை இனி யாரும் பயன்படுத்தி மற்ற சமயத்தினரை இழிவுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடாது.

இந்நாட்டில் இந்து ஆலயங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகின்றன. இவ்வாலயங்கள் அக்காலகட்டத்தில் அமலாக்க துறையின் அனுமதியோடு அவ்வேளையில் கட்டப்பட்டன என்று உணர்ந்து பேசுங்கள் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆலயங்கள் அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி் கட்டப்பட்டுள்ளன அவ்வளவுதான். ஆனால், இந்த ஆலயங்கள் சங்க பதிவு இலாகாவில் பதிவு செய்துள்ளன என்பது முற்றிலும் உண்மை.

இன்று ஆலய நில பிரச்சினைகள் உருவானதற்கு முழு காரணம் மஸ்ஸிட் இந்தியா காளியம்மன் ஆலயமாகும். இணையத்தில் "சிஸ்பா"( Sisbaa) அகப்பக்கத்தில் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

" சிஸ்பா" அகப்பக்கத்தில் வெளியான புகார்கள் அரசாங்க இலாகாவிற்கு அனுப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அரசாங்க இலாகாவிற்கு உதவும் நடவடிக்கைகள் என்று அவர் கருத்துரைத்தார்.

கடந்த 1947 ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆலயம் மஸ்ஸிட் இந்தியா காளியம்மன் ஆலயமாகும். இந்த ஆலய நிர்வாகத்தினர் ஏன் இவ்வளவு காலமாக ஆலய நிலத்தை பெறுவதற்கு நில வள இலாகாவிடம் விண்ணப்பம் செய்யவில்லை. இந்த ஆலயத்தின் சூழ்நிலைக்கேற்ப இன்னமும் பல ஆலய நிர்வாகத்தினர் செயல்பட்டு வருவதை கண்டு வருத்தப்படுவதாக அவர் சொன்னார்.

அரசாங்க அனுமதியின்றி கட்டப்படும் ஆலயங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்பதை யாரும் மறக்கக் கூடாது.

குறிப்பாக, பேராக்கில் தாப்பா, பத்துகஜா மற்றும் தைப்பிங் மருத்துவமனைகளில் ஆலய வளாகத்தில் சிறிய அளவில் ஆலயங்கள் இன்று வரை செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது " சிஸ்மா" வாயிலாக புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இவ்வாலயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இந்த ஆலயங்கள் ஒருபோதும் உடைக்கப்படாது என்று அவர் உறுதியுடன் கூறினார்.

இந்த ஆலயங்கள் மருத்துவமனை வளாகத்தில் இருப்பதால் பிரச்சினை எழுந்துள்ளது என்று மருத்துவமனை இயக்குநர் அல்லது அதன் பணியாளர்கள் எந்தவொரு புகாரும் செய்யவில்லை.

ஆனால், " சிஸ்மா" அகப்பக்கம் வாயிலாக கிடைக்கப்பெற்ற புகாராகும். இனிவரும் காலங்களில் ஆலயங்கள் குறித்து புகார் செயபவர்கள் தங்களை அறிமுகம் செய்ய முற்பட வேண்டும். இல்லையேல் அவர்களின் புகார் புறக்கணிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பேராக்கில் மாவட்ட ஆட்சியாளர்களை சந்தித்து ஆலய பிரச்சினைகள் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று மட்டும் 15 ஆலய பிரச்சினைகள் குறித்து கலந்தோலோசிக்கப்பட்டது.

அவற்றில், குறிப்பாக கோலகங்சார் அரண்மனை வளாகத்தில் இருந்து வரும் ஆலயத்திற்கு மாற்று இடம் அடையாளம் காணப்பட்டு, இடமாற்றம் விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்த கூட்டத்தை வழிநடத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

ஒரு கட்சியில் கிளை திறக்கப்பட வேண்டுமென்றாலும் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். அதுபோலவே ஆலய நிர்வாகத்திலும், இடுகாடு மற்றும் மின்சுடலை நிர்வாகத்திலும் குறைந்தது 100 உறுப்பினர்கள் இருந்தால் சிறப்பாகும்.

தற்போது பெரும்பாலான ஆலயத்தில் பத்துக்கும் குறைவான உறுப்பினர்களுடன் செயல்படுவது குடும்ப ஆலய உறுப்பினர்கள் என்றும் கூறலாம். ஆலயம் என்பது பொதுநலமாக செயல்பட வேண்டும். அங்குள்ள இந்துகளை ஒன்றிணைத்து ஆலய உறுப்பினராக செயல்படும்படி அவர் அறிவுறுத்தினார்.

குடும்ப ஆலயமாக செயல்படும் ஆலயங்களுக்கு இனிவரும் காலங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாது.

பேராக் மாநில ஆலய விவகாரங்களில் வெளி மாநிலத்தார் தலையீடு தேவையற்றது. அவரவர் மாநிலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். பொறுப்பற்றவர்கள் மூக்கை நுழைப்பதை நிறுத்திக்கொள்ளவும் என்று அவர் எச்சரித்தார்.

இனிவரும் காலங்களில் சங்க பதிவு இலாகாவினர் ஆலய நில அனுமதி இல்லையெனில்  பதிவை ஏற்கமாட்டார்கள். ஆகவே, ஆலய நில விவகாரத்திற்கு அனுமதி மிகவும் அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset