நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது: இந்தியப் பிரதமர் மோடி

புதுடெல்லி: 

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதலுக்கான பதிலடி, போர் நிறுத்தம் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அணு ஆயுத தாக்குதல் என்ற மிரட்டலை எல்லாம் இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என்று பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்

பிரதமர் மோடி திங்கள்கிழமை இரவு நிகழ்த்திய உரையில், “கடந்த சில தினங்களுக்கு முன் நம் நாட்டின் ராணுவத் திறனையும், அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம். நான் முதலில் இந்தியாவின் வீரம் மிகுந்த படைகளுக்கும், ஆயுதம் தாங்கிய படை வீரர்களுக்கும். நமது உளவுத் துறையினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் சல்யூட் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களது வீரத்தையும், துணிச்சலையும், பராக்கிரமத்தையும் வணங்குகிறேன். நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் இதைச் சமர்ப்பிக்கிறேன்.

ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. 

விடுமுறை காலத்தை கழிக்க வந்த அப்பாவி குடிமக்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு, அவர்களது குடும்பத்திற்கு முன்னே, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர். 

இது பயங்கரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரே குரலில் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின. நாங்கள் பயங்கரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி கொடுத்தோம்.
 
இன்று ஒவ்வொரு பயங்கரவாதியும், பயங்கரவாதத்தினால் ஏற்படும் தொல்லையை புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது, நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிப்பதற்கான அந்தச் செயலின் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். 

ஆபரேஷன் சிந்தூர் ஒரு பெயர் மட்டுமல்ல, இந்த நாட்டின் கோடான கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு. ஆபரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஓர் உறுதிமொழி.

மே 6-ம் தேதி இரவு, மே 7-ம் தேதி காலை இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதை கண்டார்கள். இந்தியாவின் ராணுவம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களின் மீதும், அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீதும் துல்லியமாக தாக்குதல் நடத்தினார்கள். பயங்கரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, இந்தியா இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து, நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறியாகக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. நம்முடைய ராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது. 

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை இந்தியாவின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது. இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன.

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்த தயாராக இருந்தது. ஆனால், பாகிஸ்தானின் மையப்பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சரியாக தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் விமானப் படையின் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம். இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது. இந்தியா முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

எனவே, இந்தியாவின் தாக்குதல் செயல்பாடுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேடத் தொடங்கியது. பாகிஸ்தான் உலகம் முழுவதிலும் இந்த தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்யுங்கள் என வேண்டியது. மேலும், முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10-ம் தேதி மதியத்துக்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி, நம்முடைய ராணுவத் தளபதியோடு தொடர்பு கொண்டார்.

அதுவரை நாம் பயங்கரவாத கட்டமைப்புகளை மிகப் பெரிய அளவில் அழித்து விட்டோம். பயங்கரவாதிகளை சாவின் எல்லைக்கு கொண்டு சென்றோம். பாகிஸ்தான் தன் நெஞ்சத்தில் மறைத்து வைத்திருந்த பயங்கரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம். இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது.

நான் இன்று உலக சமுதாயத்துக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்களுடைய அறிவிக்கப்பட்ட நீதி என்னவென்றால், பாகிஸ்தானுடன் ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதம் பற்றிதான் இருக்கும். ஒருவேளை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்ற காஷ்மீரை பற்றியதாக இருக்கும்.

இன்று புத்த பூர்ணிமா. பகவான் புத்தர் நமக்கு அமைதியின் பாதையை காட்டியிருக்கிறார். அமைதியின் பாதை பலத்தோடுதான் செல்கிறது. மனிதகுலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் நடக்கவேண்டும்.

ஒவ்வொரு இந்தியரும் அமைதியோடு வாழ வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியா என்கின்ற நம்முடைய கனவு நிறைவேறவேண்டும். இதற்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்கவேண்டியது அவசியம். மேலும், தேவை ஏற்படும்போது இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். மேலும், கடந்த சில நாட்களில் இந்தியா இதைதான் செய்திருக்கிறது.

நான் மீண்டும் ஒருமுறை இந்திய ராணுவம் மற்றும் ஆயுதப் படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். மக்களின் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் வணக்கம் செலுத்துகிறேன். நன்றி” என்று பிரதமர் மோடி பேசினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset