நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் களைகட்டும் தமிழ்மொழி விழா 2025

சிங்கப்பூர்:

தமிழ்மொழி விழா 2025 ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

சட்ட, போக்குவரத்து துணையமைச்சர் முரளி பிள்ளை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தமிழ்மொழியின் எதிர்காலம் இளையர்களின் கைகளில்தான் இருக்கிறது என்று அவர் கூறினார்.

இலக்­கி­யம், கலை, பண்பாடு, தொழில்நுட்பம் சார்ந்த பல்­வேறு நிகழ்ச்­சி­கள் இந்த ஒருமாத விழாவில் இடம்­பெ­றவுள்ளன.

ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து மே 4ஆம் தேதி வரை மொத்தம் 47 பங்காளித்துவ அமைப்புகளின் 46 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாண்டு புதிதாக நான்கு அமைப்புகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பட்டியலில் சேர்ந்துள்ளன.

“இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 46 நிகழ்ச்சிகளில் 74 விழுக்காட்டு நிகழ்ச்சிகள் இளையர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி.

சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு முதலியவற்றைத் தமிழின்பால் பயன்படுத்தி இளையர்களை ஈர்ப்பது எப்படி என்று தாங்கள் ஆராய்ந்து வருவதாக நசீர் கனி கூறினார்.

“இக்கால இளையர்களுக்கு ஒரு விஷயத்தை நீட்டி முழக்கிச் சொன்னால் பிடிக்காது. சுருக்கமாகச் சொல்லிப் புரியவைத்து தமிழ்மீதான அவர்களின் ஈடுபாட்டை வளர்க்க வேண்டும் என்பதை நினைவில்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று அவர் சொன்னார்.

இருப்பினும், தமிழ்மொழி விழா இளையர்களுக்கு மட்டுமில்லை என்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் திரு நசீர் கனி கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, கடந்த 60 ஆண்டுகளாக சிங்கப்பூர் கண்டுள்ள வளர்ச்சியோடு தமிழும் வளர்ந்து வந்ததைப் பற்றி நெறியாளர்கள் பேசினர்.

அத்துடன், ஊடகத்துறை அடைந்துள்ள வளர்ச்சியையும் சுட்டிய அவர்கள், வசந்தம் முழு ஒளிவழியானதையும் சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளேடான தமிழ் முரசு சிங்கப்பூரின் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியுள்ளதையும் சுட்டினர்.

தமிழ் முரசின் நிறுவனர் தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆற்றிய பங்கையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

தமிழ் முரசு தனது 90வது ஆண்டு நிறைவைக் இந்த ஆண்டு கொண்டாடவுள்ளது என்பதையும் நெறியாளர்கள் அறிவித்தனர்.

தமிழ்மொழி விழாவில் இடம்பெறவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு முன்னோட்டமாகச் சில மேடை நிகழ்ச்சிகளும் தொடக்க விழாவில் இடம்பெற்றன.

‘மணிமாறன் கிரியேஷன்ஸ்’ அமைப்பின் ‘குறளோடு கோலாட்டம்’ நடன நிகழ்ச்சியும் தொடக்‌க விழாவில் நடைபெற்றது. அதில், ஒரு குறளின் பொருளை விளக்கியதைத் தொடர்ந்து, அதற்கேற்ற நாட்டுப்புற இசைக்கு, தாளத்துக்கேற்ற கோலாட்ட நடனத்தைக் கலைஞர்கள் படைத்தனர்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset