நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு: கோலாலம்பூரில் நாளை விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது

திருச்சி:

தமிழக இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஏற்பாட்டில் அடுத்த மாதம் 9, 10, 11 ஆகிய நாள்களில் திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில், உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு நடைபெறவிருக்கிறது. அதன் விளக்கக் கூட்டம் நாளை ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் தலைமையில் நடைபெறுகிறது.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இது பொன்விழா மாநாடு என்ற சிறப்பையும் பெறுகிறது.

கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு முகமது அலி, துணைத் தலைவர் எம்.ஜி.எம்.நிஜாமுத்தீன், செயலாளர் பேராசிரியர் மு. இ. அகமது மரைக்காயர், பொருளாளர் ஷாஜஹான், பேராசிரியர் அப்துல் சமது ஆகியோருடன் புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான கவியருவி தி.மு. அப்துல் காதர் எனப் பலரும் இந்த மாநாட்டின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டது.

மாநாட்டின் வெற்றிக்காக வெளிநாட்டுப் பேராளர்களை நேரில் அழைக்கத் தமிழறிஞர் கவியருவி தி.மு. அப்துல் காதர், பொருளாளர் எஸ். எஸ். ஷாஜஹான் இருவரும் மலேசியா, சிங்கப்பூருக்கு பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

மே 9ஆம் தேதி நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொஹைதீன், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், வெளிநாட்டுப் பேராளர்கள் எனப் பலரும் கலந்து கொள்வர்.

மே மாத மாநாட்டில், தொடக்க நிகழ்ச்சி, கவியரங்கம், படைப்பாளர் கலந்துரையாடல், ஆய்வரங்கங்கள், மார்க்க அறிஞர் அரங்கம், மகளிர் அரங்கம், ஊடக அரங்கம், அயல்நாட்டு அரங்கம், கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு, விருதுகள் வழங்கல், நிறைவு விழா முதலியன இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே மலேசிய பேராளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு கொடுப்பதற்கும் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் குழு பேராசிரியர் திமு அப்துல் காதர், பொருளாளர் ஷாஜஹான் ஆகியோர் நாளை கோலாலம்பூர் வர இருக்கின்றார்கள்.

அது குறித்த விளக்கக் கூட்டம் கோலாலம்பூர், ஜாலான் டாங் வாங்கியில் அமைந்துள்ள செய்யது பிஸ்ட்ரோ உணவகத்தின் மண்டபத்தில் நாளை (ஏப்ரல் 8) மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இக்கூட்டம் குறித்த  மேல் விவரங்களுக்கு சிம்ஸ் அமைப்பின் தலைவர் டத்தோ எம் இசட் கனியை 012-3171575  தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset