
செய்திகள் ASEAN Malaysia 2025
வியட்நாமிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் ஹனோய் சென்றடைந்தார்
ஹனோய்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக வியட்நாம் வந்தடைந்தார்.
அவர் நாளை இரண்டாவது ஆசியான் எதிர்கால மன்றத்தில் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார்.
பிரதமர் பயணம் செய்த சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 7.10 மணிக்கு ஹனோய் நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
வியட்நாம் துணை வெளியுறவு அமைச்சர் என்கோ லீ வான், வியட்நாமுக்கான மலேசிய தூதர் டத்தோ டான் யாங் தாய் ஆகியோர் பிரதமரையும் மலேசியக் குழுவையும் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பிரதமருடன் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், வெளியுறவு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முஹம்மது ஜின், கோலா கங்சர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித், ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹுடா ஹசன் ஆகியோரும் வியட்நாம் சென்றுள்ளனர்.
ஆசியான் எதிர்கால மன்றம் என்பது ஆசியானின் எதிர்கால திசை குறித்து ஆசியான் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள், சிந்தனையாளர்கள், வணிகத் தலைவர்கள், பங்குதாரர்களிடையே கலந்துரையாடல் உள்ளடக்கிய தளமாகும் என்று விஸ்மா புத்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்