
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் தலைமைத்துவ பொறுப்பை ஏற்கவிருக்கும் மலேசியாவுடன் இந்தியா இணைந்து பயணிக்கும்: டாக்டர் சேஷாத்ரி சாரி
கோலாலம்பூர்:
ஆசியான் தலைமைத்துவ பொறுப்பை ஏற்கவிருக்கும் மலேசியாவுடன் இந்தியா இணைந்து பயணிக்கும்.
ஆர்ஐஎஸ் எனப்படும் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி, தகவல் அமைப்பின் நிர்வாக உறுப்பினர் டாக்டர் சேஷாத்ரி சாரி இதனை கூறினார்.
இந்தியா, மலேசிய வர்த்தக மாநாடு மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
இரு நாடுகளில் இருந்து பல வர்த்தக பொருளாதார நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
சிஇஎஸ்டி ஆசியா, ஆர்ஐஎஸ் ஏற்பாட்டிலான இம்மாநாடு மாட்ரேட் உட்பட பல நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெறுகிறது.
மலேசியா இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக, பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
மலேசியா வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மையாக உள்ளது. பல துறைகளில் மலேசியா மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
அதன் அடிப்படையில் மலேசியா அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைத்துவ பொறுப்பை ஏற்க உள்ளது.
அதேவேளையில் கடன் வாங்கி நாட்டை வழி நடத்திய இந்தியா இப்போது பல நாடுகளுக்கு வர்த்தக கடனை கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்த ஒரு சூழ்நிலையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது வர்த்தக பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கும் மலேசியாவுடன் இணைந்து இந்தியா செயல்படும்.
இவ்விரு நாடுகளின் இணைவதன் மூலம் ஆசியான் மேம்பாட்டிற்கும் அது வித்திடும்.
இதனை அடிப்படையாகக் கொண்டே இன்றைய மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று டாக்டர் சேஷாத்ரி சாரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்