நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் தெய்வப்புலவர் தந்த திருக்குறள் என்னும் கருத்தரங்கு 2025ஆம் ஆண்டு நடைபெறும்: சுவாமி மகேந்திரா

கோலாலம்பூர்:

மலேசியாவில் தெய்வப்புலவர் தந்த திருக்குறள் என்னும் கருத்தரங்கு வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும்.

மலேசிய ஆதிசங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திரா இதனை கூறினார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கை அமைப்பது சம்பந்தமாக இந்திய, மலேசிய பிரதமர்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பாகுபாடின்றி விரும்பிப் படிக்கும் நூல் திருக்குறள். 

நீதி நெறிகளை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படித் தெளிவாக எடுத்துரைக்கின்ற சாஸ்திர நூல் திருக்குறள் என்று சொன்னால் அது மிகையாகாது. 

2000 வருடங்களுக்கு முன்பாக சங்க பலகையில் மதுரையில் திருக்குறளை அரங்கேற்றினார் திருவள்ளுவர். 

எட்டாம் நூற்றாண்டில் காலடியில் அவதரித்த மகான் ஆதிசங்கரர் பாரத தேசம் முழுவதும் பயணம் செய்து கடவுள் பிரார்த்தனை, துறவின் மேன்மை, பிற உயிர்களை நேசிக்கும் தன்மை, உயிர் கொல்லாமை, சமாதானம் போன்றவற்றை எடுத்துரைத்தார். 

திருவள்ளுவரும் ஆதிசங்கரருக்கு முன்பாகவே இக் கருத்துக்களை எடுத்துரைத்த தெய்வப் புலவர் ஆவார். 

ஆதிசங்கரர் சொல்லும் நல் நெறிகளை, உயர்ந்த வேத கருத்துக்களை தமிழ் பக்தி இலக்கியங்களோடு இணைத்து மலேசியாவில் ஆதிசங்கர திருமடம் மூலம் பரப்பி வருகிறோம். 

தேவாரம் திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் திருக்குறளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவ்வப்பொழுது சொற்பொழிவு ஆற்றுகிற இடத்தில் எல்லாம் சொல்லி வருகிறோம்.

மலேசியப் பிரதமர் இந்தியா சென்ற பொழுது பாரதப் பிரதமரைச் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டுள்ளார். 

மலேசியாவும் பாரதமும் கைகோர்த்து பல நல்ல நடவடிக்கைகளை எடுக்கப் போவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். 

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் எங்களது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

முக்கியமாக திருக்குறள் இருக்கை ஒன்றை மலேசியாவில் ஏற்படுத்துவதற்கு பாரதப் பிரதமர் எடுத்த முயற்சியை மலேசியப் பிரதம மந்திரியும் வரவேற்று இருப்பது உள்ளபடியே மகிழ்ச்சியைத் தருகிறது. 

மலேசிய ஆதிசங்கர திருமடத்தின் சார்பில் நடத்தப்படும் சமய வகுப்புகளில் அவசியம் திருக்குறளில் இருந்தும் மேற்கோள்களைச் சொல்லி சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்லதை எடுத்துச் சொல்லி வருகிறோம். 

மலேசியாவில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க இருப்பதை மீண்டும் மனதார வரவேற்பதுடன் 2025ஆம் ஆண்டு  ஜனவரியில் தெய்வப்புலவர் தந்த திருக்குறள் என்னும் கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள எல்லா அமைப்புகளும் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம். 

இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் மலேசிய இந்திய பிரதமர்களுக்கு திருக்குறள் இருக்கையை மலேசியாவில் அமைப்பதற்காக மேற்கொண்ட ஒப்பந்தத்திற்காக மீண்டும் எங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset