செய்திகள் இந்தியா
மைக்ரோசாப்ட் தொழில்நுட்பப் பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் கடும் பாதிப்பு
புதுடெல்லி:
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன.
‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை மேம்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ‘பால்கன் சென்சார்’ மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாப்டின் சர்வர் நேற்று திடீரென முடங்கியது.
இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் அஸூர்,ஆபீஸ் 365 சேவைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின.
பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி, ‘கணினிசெயலிழந்துள்ளது’ என்பதை காட்டியது.
இந்தப் பிரச்சனை காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உட்பட உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் முடங்கின.
குறிப்பாக, விமானம், ரயில், வங்கி,பங்கு சந்தை, ஊடக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்திய பங்குச் சந்தைநிறுவனங்களான 5பைசா, நுவாமா உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. ‘இந்தியாவின் நிதி சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
10 வங்கிகளின் சேவைகளில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு, உடனடியாக சரிசெய்யப்பட்டது’ என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டஅறிக்கையில், ‘தொழில்நுட்ப பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து தீர்வுகாண முயற்சி செய்து வருகிறோம். மைக்ரோசாப்ட் 365 சேவையை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவன தலைமைசெயல் அதிகாரி ஜார்ஜ் கூறும்போது, “சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். இதற்காக நிறுவனங்கள், பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம்.
தொழில்நுட்பப் பிரச்சனைக்குத் தீர்வு காண சற்று அவகாசம் தேவைப்படும் என்றார்.
இதுகுறித்து சர்வதேச சைபர் பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறும்போது கடந்த 2017 மே மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் மீது ‘வான்னாகிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகள், மடிக்கணினிகள் செயலிழந்தன. தொழில்நுட்ப சேவைகள் பாதிக்கப்பட்டன.
7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதேபோன்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்த முறை பாதிப்பு அதிகமாக உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண எத்தனை நாட்கள் ஆகும் என்பதை உறுதியாக கூற முடியாது என்றனர்.
மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகமே முடங்கியபோதிலும், ரஷ்யா, சீனாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நாடுகளின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
