செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.
77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார்.
இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ணக் கொடிக்கு முதல் வணக்கம். அதன் நிழலில் வாழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல் வணக்கம்.
இந்திய ஒன்றியத்தின் முக்கிய அங்கம் நம் தமிழ்நாடு. மூத்த மொழியாம் தமிழை தாய்மொழியாகக் கொண்ட நம் தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் என அழைக்கப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு அண்ணா முதலமைச்சர் ஆன பிறகுதான் 1967, ஜூலை 18ம் நாள் தமிழ்நாடு என பெயரிடப்பட்டது. ஒரே ஒரு சங்கரலிங்கனார்தான் உயிரிழந்துள்ளார் என்று நினைப்பீர்களேயானால், 5 உயிர்களைத் தர தயாராக இருக்கிறோம் என தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் கருணாநிதி.
சென்னை மாகாணத்தின் பிற மொழி பேசும் எல்லா பகுதிகளும் தனித்தனி மாநிலங்களாக பிரிந்த பிறகு தமிழ்நாட்டிற்கு ஏன் தமிழ்நாடு என பெயரிடக்கூடாது என கேட்டவர் பெரியார்.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் 3வது முறையாக தேசியக் கொடியை ஏற்றுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
இதற்கான வாய்ப்பை அளித்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதல்வர்களுக்கு சுதந்திர நாளில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முதல்வராக இருந்த கருணாநிதி என்று முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சுதந்திர தின விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தகைசால் விருதுடன் ரூ.10 லட்சத்துகான காசோலை, பாராட்டு சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.
விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கபட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.11,000 ஆக உயர்த்தி வழங்கபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடியில் இயங்கி வரும் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்ளிட்ட 6 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் வழங்கினார்.
கோவை எஸ்.பி. பத்ரிநாராயணன், தேனி எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை எஸ்.பி. குணசேகரன், நாமக்கல் எஸ்.ஐ. முருகன், காவலர் குமார் பதக்கம் பெற்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 5:01 pm
தமிழகத்தில் நீட் தோ்வு இன்று தொடங்கியது
May 5, 2024, 10:54 am
தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டது: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை
May 5, 2024, 10:48 am
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
May 4, 2024, 2:50 pm
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am