நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மக்களவையில் திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக அரசு நடுங்குகிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 

"நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால், பாஜக அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கருணாநிதியின் வார்ப்புகள் அப்படி" என்று திமுக தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ஆகஸ்ட் 7-ம் தேதி நடந்த கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி குறித்து விவரித்துள்ளார். அத்துடன், கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகத்துடன் இணைந்து பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், அக்கடிதத்தில் அவர் கூறியது: “இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்ட திமுகவின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர், தான் கலந்துகொண்ட மத்திய பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் திமுக மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார். நாடாளுமன்றத்தில் பாஜக அரசு மீது ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆணித்தரமான வாதங்களை அடுக்கிப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல் காந்தி.

மணிப்பூரைப் பற்றி, அங்கு நடக்கும் கலவரம் பற்றி அங்கே பற்றி எரியும் வன்முறைத் தீ பற்றி அவர் பேசினார். ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போடும் பாஜகவின் ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்வியாக முன்வைத்தார் ராகுல் காந்தி. 

இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பாஜக படுவேகம் காட்டியது. ஆனால், உச்ச நீதிமன்றம் சென்று நீதியை நிலைநாட்டி, நாடாளுமன்றத்தில் இளஞ்சிங்கமாக நுழைந்து கர்ஜித்திருக்கிறார் ராகுல்.

அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர் ஸ்மிருதி இரானி, தன் பேச்சில் திமுக மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார். நமது கட்சியின் மக்களவை உறுப்பினரும், துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா சிறைக்கு அனுப்பப்படுவார் என்று, ஒன்றிய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பொறுப்பில்லாத்தனமாகப் பேசிய நிலையில், அதற்கு ஆ.ராசா உடனடியாக பதிலடி கொடுத்ததை திமுகவினரான உங்களில் பலர் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

“நான் கைது செய்யப்படப் போவதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்துறையை பாஜக அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?” என்று ஆ.ராசா நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளுந்தரப்பில் உரிய பதில் தரப்படவில்லை. 

பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சிகள் இவற்றைக் குறி வைப்பதற்காகத்தானே அமலாக்கத்துறை, சிபி.ஐ, வருமான வரித்துறை உள்ளிட்டவற்றை பாஜக அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, “எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்” என்ற வகையில் பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது.

திமுக இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவையில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கிறார்கள். 

கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி, பாஜகவின் செங்கோல் லட்சணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். தயாநிதி மாறன் டெல்லி சட்டமசோதா பற்றி பேசியிருக்கிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால், பாஜக அரசு நடுங்குகிறது. 

அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கருணாநிதியின் வார்ப்புகள் அப்படி.

கருணாநிதி என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல. தமிழ் இனம், மொழி, நிலம் காத்து நிற்கும் வினைச்சொல். நமக்கு உரிமையுள்ள உரிச்சொல். அரசியல் எதிரிகளை அடையாளம் காட்டி ‘உரி’க்கின்ற சொல். எந்நாளும் நமக்கு ஊக்கத்தையும், இன எதிரிகளுக்கு அச்சத்தையும் தருகின்ற சொல். இந்தியா முழுமையும் உள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சொல். 

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல். குமரி முதல் இமயம் வரை கருணாநிதி என்ற பெயரைச் சொல்லுவோம். இந்தியா முழுவதும் கருணாநிதியின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்" என்று அந்தக் கடித்ததில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset