நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழுக்கும் ஆபத்தாக அமையும்: தமிழக முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர்: 

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழுக்கும் ஆபத்தாக அமையும். அத்தகைய பாஜகவை வீழ்த்த, பிஹார் மாநிலம் பாட்னாவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்று, திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, அவரது நினைவாக திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7,000 சதுரஅடி பரப்பில் ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. 

விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். 

பின்னர், கலைஞர் கோட்டத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதல்வர் ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி ஆகியோர் திறந்து வைத்தனர். 

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், 2-ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 

வாழும்போது வள்ளுவர் கோட்டம் கண்ட கருணாநிதிக்கு, திருவாரூரில் எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. என் தாயார், தனது கணவருக்கு கட்டிய கோயிலாகவே இதை கருதுகிறேன்.

‘ஜனநாயகம் என்பது வீட்டின் விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ’ என்று கருணாநிதி கூறுவார். மத்தியில் கடந்த 9 ஆண்டுகளாக சர்வாதிகார பாஜக, ஆட்சியில் உள்ளது. அத்தகைய பாஜகவை வீட்டுக்கு அனுப்புவதற்காக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில், பிஹார் மாநிலம் பாட்னாவில் வரும் 23-ம் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாடு செய்து வருகிறார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், தமிழுக்கும் ஆபத்து. பாஜகவை வீழ்த்த, அந்த கூட்டத்தில் வியூகங்கள் வகுக்கப்படும். ‘நாளையும் நமதே, நாற்பதும் நமதே’எனும் முழக்கத்தோடு, உங்கள் வாழ்த்துகளுடன் அதில் நான் பங்கேற்க உள்ளேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

கருணாநிதியின் அருகே அமர்ந்திருப்பதுபோல, பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வசதி அங்கு அமைக்கப்பட்டுள்ளது. தேஜஸ்வி அங்கு அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், மாலதி லஷ்மண் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

திமுகவினரும் தோழமைக் கட்சியினரும் விழாவில் திரளாகக் கலந்து கொண்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset