நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய வணிகர்களின் வயிற்றில் அடிக்காதீர்: அரசுக்கு முன்னாள் மனிதவள அமைச்சர் கோரிக்கை

கோலாலம்பூர்:

தற்காலிக வேலை பெர்மிட் திட்டத்தை முடக்குவதன் மூலம் இந்திய வணிகர்களின் வயிற்றில் அரசு அடிக்க கூடாது என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.

அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்காமல் தத்தளிக்கும் தொழில் துறைகள் பயன்பெறும் வகையில் இந்த தற்காலிக வேலை பெர்மிட் திட்டத்தை அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்தது.

இந்தப் பெர்மிட் நடைமுறை ஒரு தற்காலிக தீர்வாகவே இருந்து வந்தது.

 ஆனால் இதன் மூலம் இந்தியத் தொழில்துறைகளுக்கு வேலை ஆட்கள் கிடைத்து வந்தனர்.

இந்தவொரு நிலையில் இந்த பெர்மிட்டுடன் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் இனி அதனை புதுப்பிக்க முடியாது. இதனால் அவர்கள் தங்களின் நாடுகளுக்கு திரும்பி செல்ல வேண்டும்.

இந்த புதிய நடைமுறையினால் ஜவுளி, நகை பொற்கொல்லர், முடி திருத்துவோர் ஆகிய மூன்று தொழில்துறைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும்.

இதற்கு ஒரு தீர்வு காணவில்லை என்றால் இந்த மூன்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 கடைகள் இழுத்து மூடப்படும்.

நாட்டின் வருமானத்திற்கு உதவும் இது போன்ற தொழில்துறைகள் முடங்கினால் அது நாட்டிற்கு தான் பெரும் பாதிப்பு.

இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாக இழுப்பறியாகவே உள்ளது. கடந்த நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் நான் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றேன்.

அப்போது டான்ஸ்ரீ மொஹைதீன் உள்துறை அமைச்சராக இருந்தார். இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதற்கு எந்த பலனும் இல்லை.

அதன் பின் ஆட்சி கவிழ்ந்தது. ஆனால் இந்த தொழில் துறைகளில் பிரச்சினைகளுக்கு தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.

தற்போது ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இந்த பிரச்சினை மேலும் மோசமாகி விட்டது.

இந்த துறைகளில் முழுமையாக இந்தியர்களே ஈடுபட்டு வருகின்றனர். இந்த புதிய அமலாக்கத்தால் பிரதமரும் உள்துறை அமைச்சரும் அந்த வணிகர்களை தண்டிக்கக் கூடாது.

மற்ற தொழில்துறைகளை காட்டிலும் இந்திய தொழில்துறைகளை குறிவைத்து பழி வாங்கப்படும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் இணைந்து அந்நிய தொழிலாளர்கள் விவகார சிறப்பு குழுவை அமைத்தது.

இக்குழு உடனடியாக கூடி இந்த விவகாரத்திற்கு ஒரு நிரந்தர முடிவை எடுக்க வேண்டும்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின், மனிதவள அமைச்சர் சிவகுமார் ஆகியோர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset