
செய்திகள் மலேசியா
சுபாங் விமான நிலையத்தை விற்கப்போகிறோமா?: நிதி அமைச்சு விளக்கம்
புத்ராஜெயா:
சுபாங் விமான நிலையத்தை விற்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய சொத்துக்கள் என்பன அரசாங்கத்தின் வியூகச் சொத்துக்களாக கருதப்படுபவை என்றும், சுபாங் சுல்தான் அப்துல் அஜீஸ் Sultan Abdul Aziz Shah Airport (LTSAAS), விமான நிலையத்தைப் பொறுத்தவரை அது 60 ஆண்டுகாலக் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்த குத்தகை காலமானது வரும் 2067ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. LTSAAS அமைந்துள்ள பகுதியும் இந்தக் குத்தகையில் அடங்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த 2009ஆம் ஆண்டு மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்நிறுவனத்தின் மேலாண்மையின் கீழ் உள்ள 39 விமான நிலையங்களில் LTSAAS-ம் ஒன்று. எனினும் இந்த விமான நிலையங்கள் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது அல்ல.
"LTSAAS-ன் சொத்துக்களை மேம்படுத்தும் பொறுப்பு MAHBக்கு உண்டு. அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வைத்து, அந்த விமான நிலையம் விற்கப்படுவதாகக் கருதக் கூடாது," என நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.