நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய மீட்புத் திட்டம்: நான்கு பகுதிகளாக செயல்படுத்தப்படும் என பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா:

அன்றாடம் பதிவாகும் புது நோயாளிகளின் எண்ணிக்கை நான்காயிரத்துக்கும் கீழ் வரும் பட்சத்தில், தற்போது அமலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 3.0இன் முதல் கட்டம் முடிவுக்கு வரும் என பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
இதே வேளையில் தேசிய மீட்புத் திட்டம் நான்கு பகுதிகளை உள்ளடக்கியது என்றும் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

MCO 3.0இன் இரண்டாவது கட்டத்தில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மீண்டும் இயங்கத் தொடங்கும் என்றும் 80 விழுக்காட்டினர் மீண்டும் தங்கள் பணியைத் தொடங்க பணியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

"தேசிய மீட்புத் திட்டத்தின் இரண்டாவது பகுதியானது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பத்து விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் துவங்கும்.

"இது தேசிய மீட்புத் திட்டத்தின் முதல் பகுதியின் தொடர்ச்சியாக அமையும். எனவே இப்போதும் சமூக நடவடிக்கைகள் மற்றும் MCO 3.0 தொடர்பான கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

"மேலும் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கும் அனுமதி கிடையாது. குறிப்பிட்ட துறைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்," என்றார் பிரதமர்.

தேசிய மீட்புத் திட்டத்தின் மூன்றாம் பகுதியில் அனைத்து பொருளியல் துறைகளும் இயங்க அனுமதிக்கப்படும் என்றாலும், அன்றாடம் பதிவாகும் புதுத் தொற்று எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் கீழ் பதிவாகும் போதே இது சாத்தியமாகும் என்றும் பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் இன்று தெரிவித்தார்.

"மேலும், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்ட பிறகும், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் கட்டுக்குள் வந்த பிறகும், மூன்றாவது பகுதிக்குள் செல்ல அரசு தயங்காது. ஆகஸ்ட் மாதத்துக்குள் இது சாத்தியமாகக் கூடும்.

"அன்றாட தொற்று எண்ணிக்கை 500க்கும் கீழ் பதிவாகும் பட்சத்திலும், 60 விழுக்காட்டினர் இரு தவணை தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பிறகும் தேசிய மீட்புத் திட்டத்தின் இறுதிக் கட்டமான நான்காம் பகுதி தொடங்கும்.

"தற்போது செயல்படுத்தப்படும் தேசிய மீட்புத் திட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட இலக்கை நடப்பாண்டின் அக்டோபர் மாதத்துக்குள் எட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நான்காம் பகுதிக்குப் பிறகு தேசிய மீட்புத் திட்டம் முடிவுக்கு வரும் என்றும், இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பும் என்றும் அவர் கோடிகாட்டினார்.

"அச் சமயம் அனைத்து பொருளாதாரத் துறைகளும் இயக்கத்துக்கு வரும். சமூக நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். சில SOPக்களின் கீழ் உள்நாட்டுப் பயணங்களுக்கு அனுமதி உண்டு. தேசிய சுகாதார கட்டமைப்பு பாதுகாப்பான அளவில் இயங்குவது உறுதி செய்யப்படுவதுடன் தொற்று எண்ணிக்கை ஆகக் குறைவாக இருப்பதும் உறுதி செய்யப்படும்.

"மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அடைய வேண்டும் என்ற இலக்கை தேசிய தடுப்பூசித் திட்டம் எட்டிப் பிடித்திருக்க வேண்டியதும் அவசியம்," என்று பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset