நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலையிழந்தவர்களுக்கு உதவியாக மனிதவள அமைச்சின் வேலை காப்புறுதித் திட்டம்: டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிக்கை

புத்ராஜெயா:

நடமாட்டக் கட்டுப்பாடு காலகட்டத்தில் மக்களுக்கு உதவியாக பல்வேறு திட்டங்களை அரசாங்கம் அமல்படுத்தி வருவதாகவும், அதில் மனிதவள அமைச்சின் கீழ் பெமெர்காசா தொடர்திட்டத்தின் வழியாக சம்பள மானியத் திட்டம் 3.0 மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், முழுமுடக்கத்தினால் பாதிப்புற்றிருக்கும் பொருளாதாரத் துறைகளுக்குக் கூடுதலாக ஒரு மாதச்சம்பள மானியம் மனிதவள அமைச்சின் கீழ் வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், இதன் மூலம் வேலை இழப்புகளையும், வேலை நிறுத்தங்களையும் குறைக்க முடியும் என்றும், கொரோனா தொற்றின் பாதிப்பு தொடங்கிய காலம் முதலாகவே அரசாங்கம் பிரிஹாதின், பெஞ்சானா, பெமெர்காசா திட்டங்கள் வழியாக சம்பள மானியத் திட்டம் 1.0, 2.0, 3.0 என வரிசையாக அமல்படுத்தி வருகிறது என்றும் அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதன்வழி இதுவரை 4.7 மில்லியன் தொழிலாளர்கள் வேலையிழப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், ஏறத்தாழ 5 லட்சம் முதலாளிமார்கள் பயனடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"கொரோனா தொற்று மனித வாழ்வை புரட்டிப் போட்டதை யாரும் மறுப்பதற்கில்லை. சுகாதாரப் பிரச்சனை ஒருபுறம், பொருளாதார சிக்கல் மறுபுறம் என நாடும், மக்களும் அவதியுற்றிருப்பது கவலைக்குரிய விஷயம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு, முழுமூச்சாக கட்டுப்பாடாக இருந்தால் ஒழிய இதில் எந்த பிரச்சனையையும் நாம் தீர்க்க முடியாது.

"எனவேதான் நாளுக்கு நாள் பெருகிவரும் கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க, கொரோனா சங்கிலித் தொடரை அறுக்க அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை 3.0 அமல்படுத்தி வருகிறது. இன்றைய பொருளாதார சிக்கலிலிருந்து நாம் மீண்டு வரலாம், வரமுடியும். ஆனால் அதற்கு நாம் உயிரோடு இருக்க வேண்டும். 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்பர். எனவே முதலில் நாம் முறியடிக்க வேண்டியது இந்த சர்வதேச பரவலை," என அமைச்சர் சரவணன் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் உதவிகளையும் மீறி சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதையும், சிலர் வேலையிழந்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு வேலை இழந்தவர்களுக்கு உதவும் வகையில், வேலை காப்புறுதித் திட்டம் ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக அமலில் இருந்து வருகிறது என்றும், மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ வழி வேலை  இழந்த பங்களிப்பாளர்களுக்கு உதவித் தொகை வழங்கி, வேலை கிடைப்பதற்கும் உதவியாக இருக்கும் திட்டமிது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

"இப்பங்களிப்புக்குத் தகுதியுடையவர்கள் மற்றும் திரும்பவும் வேலை செய்வதற்கு விருப்பம் உள்ளவர்களுக்கு 3 மாதத்திலிருந்து 6 மாதம் வரை, வேலை தேடுவதற்கான அலாவன்ஸ் (சம்பளத்திலிருந்து ஒரு தொகை) வழங்கப்படும். உங்கள் சம்பளத்தில் “EIS” என ஒரு தொகை வழக்கமான  சொக்சோ தவிர்த்து, செலுத்தப்பட்டிருந்தால் அதுவே வேலைக்கான காப்புறுதித் தொகையாகும்.

"இந்தச் சூழலில் நீங்கள் வேலையிழந்திருந்தால் உடனடியாக அருகாமையில் உள்ள சொக்சோ அலுவலகங்களுக்குச் சென்று உங்களுக்கான வேலை காப்புறுதி உதவியை உறுதி செய்து கொள்ளுங்கள். அல்லது  www.perkeso.gov.my என்ற இணைய முகவரியிலும், 1 300 22 8000 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வேலை செய்தவர்கள், அதில் ஏதாவதொரு வேலையை இழந்து, அதனால் வருமானம் குறைந்தவர்கள் கூட இந்த காப்பீட்டு நிதியுதவியப் பெறலாம்.

"மேலும் அடுத்த வேலையைப் பெறுவதற்கும் உடனடியாக மனிதவள அமைச்சின் பெர்கேசோவின் www.myfuturejobs.gov.my எனும் அகப்பக்கத்தில், உங்களது தகவல்களையும், விரும்பும் வேலையையும் பதிந்து கொள்ளுங்கள். 2020 லிருந்து இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் இந்த அகப்பக்கத்தின் வழி புதிய வேலையைப் பெற்றுள்ளார்கள். எனவே மனம் தளராமல், நேரத்தை ஒதுக்கித் தகவல்களை அங்கே பூர்த்தி செய்யுங்கள். இன்றைய சூழல் நிச்சயம் மாறும் எனும் நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து முயற்சி செய்வோம்," என்றும் அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset