நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் பொருளாதாரம், கல்வி, சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்த மித்ராவின் கீழ் 7 புதிய திட்டங்களுக்கு 59.76 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்தின் பொருளாதாரம், கல்வி, சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்த மித்ராவின் கீழ் 7 புதிய திட்டங்களுக்கு 59.76 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 20,000க்கும் அதிகமான தனிநபர்களும் 600 நிறுவனங்களும் பயனடைவர் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான 'உயர்வு மதானி' இரண்டாம் கட்ட மானியங்கள் வழங்கும் விழாவில் உரையாற்றிய அமைச்சர், அடிமட்ட அளவில் இந்திய சமூகத்தின் போட்டித்தன்மையை உயர்த்தி, டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதே மலேசிய மடானி அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்றார்.

சிறு, நடுத்தர தொழில்முனைவோரின் வளர்ச்சிக்காக 'உயர்வு மதானி 2.0' திட்டத்திற்கு கூடுதல் நிதியாக 25 மில்லியன் ரிங்கிட் சேர்க்கப்பட்டு, மொத்த நிதி ஒதுக்கீடு 50 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,400 வணிகர்கள் பயனடைவர். இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13 வரை திறக்கப்பட்டிருக்கும்.

உயர் கல்வியைப் பொறுத்தவரை, முதலாமாண்டு பயிலும் பி0, எம்40 பிரிவு மாணவர்களில் 5,000 பேருக்கு உயர்தர டிஜிட்டல் சாதனங்களை வழங்க 'பெராந்தி மதானி' திட்டத்தின்கீழ் 13.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 'மாணவர் சிறப்பு உதவித் திட்டம்' மூலம் 5,000 பி40 பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலா 2,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 10 மில்லியன் ரிங்கிட் ஆரம்பக் கல்வி உதவிநிதியாக வழங்கப்படும். இவ்விரு திட்டங்களுக்கும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்.

பள்ளிக் கல்வித்துறையில், நவீன கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் நாடு முழுவதிலும் உள்ள 358 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 விவேகப் பலகைகள் (ஸ்மார்ட் போர்டுகள்) வழங்க 5.36 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி அமைச்சின் கூட்டுறவோடு எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் தமிழ்மொழியை மேம்படுத்தும் திட்டத்திற்கு 900,680 ரிங்கிட் நிதியளிக்கப்படுகிறது. இதன் மூலம் 8,690 மாணவர்கள் பலனடைவர்.

சமூக இணக்கத்தை வலுப்படுத்த 'ஹர்மோனி மதானி' திட்டத்தின்கீழ் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் தேர்வு செய்யப்படும் அதிகபட்சமாக 250 குர்துவாராக்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவ தேவாலயங்களுக்குத் தலா 20,000 ரிங்கிட் மானியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 13 வரை திறந்திருக்கும்.

தவிர, மலாக்கா மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்க்க மலேசிய குற்றத் தடுப்பு அறக்கட்டளையுடன் (MCPF) இணைந்து 250,000 ரிங்கிட் மதிப்பில் விழிப்புணர்வுத் திட்டமும் நடத்தப்படும்.

இந்த உதவிகள் அனைத்தும் தகுதியான நபர்களுக்கு வெளிப்படையாகவும் முறையாகவும் சென்று சேர்வதை உறுதி செய்ய, அரசு ஏஜென்சிகளுடன் இணைந்து கடுமையான பரிசீலனை முறைகள் பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset