நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயுதக் கலவர வழக்கு: 11 பேர் மீது குற்றச்சாட்டு

ஜார்ஜ்டவுன்:

இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கலவரத்தில் பங்கேற்றதாக தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட மொத்தம் 11 பேர்,  பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

முஹம்மத் நுன் முஹம்மத் ஜுப்ரி, வி. ராதாகிருஷ்ணன், எம்.சொமன் ஶ்ரீ, முஹம்மத் ஹைகால் முஹம்மத் ரபிஃ, ஜி.சாட் செபஸ்தியன், எழிஜா யொங், சியொ ஜுன்னுவோ, தொனி யென் சுன் யுன், ஆர்.திவாகர், முஹம்மத் அமிருல் ஹபிஃ அப்துல்லா, ங் செர்ன் யோ ஆகியோர் அக் குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரினர்.

கலவரத்தில் பங்கேற்று, தாக்குதலுக்குப் பயன்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்ததாக 19 முதல் 34 வயதிற்கு உட்பட்ட அவர்கள் அனைவரது மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி, அதிகாலை மணி 2.45 அளவில் அயர் ஈதாமில் உள்ள பள்ளி ஒன்றின் முன்புறத்தில் அவர்கள் அக் குற்றத்தைப் புரிந்துள்ளனர்.

குற்றவியல் சட்டம், பிரிவு 148, 120B-யின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தலா 6,000 ரிங்கிட் ஜாமின் தொகை விதித்த மாஜிஸ்திரேட் நோர் இடாயூ சலிம், ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு, அக்டோபர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

- பெர்னாமா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset