நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RTS LINK ரயில் போக்குவரத்து சேவை: சில நொடிகளில் குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ய புதிய திட்டம் 

ஜொகூர் பாரு: 

2027ஆம் ஆண்டு ஜொகூர் பாரு- சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. 

இதனால் RTS லிங்க்கில் பயணம் செய்யும் பயணிகள் சில நொடிகளில்  குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிட் சாகார் ஒருங்கிணைந்த குடிநுழைவு, சுங்கம் மற்றும் தனிமைப்படுத்தல் (ICQ) வளாகத்தில் பயணிகள் முதலில் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் மின்-கேட் (e-gate) வழிச் செல்வார்கள் என்று திட்ட இயக்குநர் சுல்கிஃப்லி முகமது தெரிவித்தார்.

இந்த ICQ வளாகத்தில் பாஸ்போர்ட் மற்றும் QR குறியீடு மூலம் சோதனையை முடிக்கும் வகையில் 100 மின்-கேட் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், பயணிகள் நடந்து செல்லும்போதே தடை செய்யப்பட்ட பொருட்களைக் கண்டறியும் நவீன உடல் பரிசோதனைக் கருவிகளும் இங்குப் பொருத்தப்பட்டுள்ளன.

ஏதேனும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பயணிகள் இரண்டாம் கட்ட சோதனை மையத்திற்கு வழிகாட்டப்படுவர்.

மேலும், இந்த ICQ வளாகத்தில் பாலுட்டும் அறைகள், தொழுகை அறைகள் மற்றும் சுய சேவை பயணச்சீட்டு மையங்கள் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பணிகளுக்காக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையுடன் மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வுச் சேவைத் துறையும் இங்குச் செயல்படும்.

இதன் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிடப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஆகஸ்ட் 18 அன்று வளாகத்திற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெரிசலைக் குறைக்கவும் பயணிகளின் சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் 10 பாதுகாப்புப் பரிசோதனை பாதைகள், 18 உடைமை ஸ்கேனர்கள் மற்றும் லக்கேஜ் இல்லாத பயணிகளுக்குத் தனிப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வரும் 2027 ஜனவரி 1-ஆம் தேதி சேவைக்கு வரவிருக்கும் இந்த 4 கிலோமீட்டர் ஆர்டிஎஸ் லிங்க் ரயில் சேவை, ஜொகூர் பாருவின் புக்கிட் சாகாரையும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்தையும் இணைக்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset