நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ, தாமான் லிம் கார்டன் பகுதியின் சுகாதாரப் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

ஈப்போ, தாமான் லிம் கார்டன் பகுதியில் சுகாதாரம், டிங்கி அபாயம் தொடர்பாக குடியிருப்பாளர்கள் முன்வைத்துள்ள புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

அப்பகுதியில் புல் வெட்டப்படாமை, கழிவுநீர் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து சுகாதாரத் துறையிடம் விளக்கம் கோரப்பட்டதாக அவர் கூறினார்

அதன்படி, 2026ஆம் ஆண்டில் தாமான் லிம், ஈப்போ பகுதியில் இதுவரை இரண்டு டிங்கி சம்பவங்கள். மட்டுமே பதிவாகியுள்ளன.

அவை மே, ஜூன் மாதங்களில் பதிவானவை என்றும், 2025ஆம் ஆண்டு ஒரு சம்பவம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்கு சம்மவங்கள் கொண்ட டிங்கு தொற்றுப் பரவலும் பதிவாகியிருந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தாமான் லிம் பகுதியில் சின்னம்மை (Chickenpox) தொற்றுப் பரவல் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அப்பகுதியில் சுமார் 19 பங்களா வீடுகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதாக குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இத்தகைய இடங்கள் கொசுக்கள் பெருகுவதற்கும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமையக்கூடும் என டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

“கிண்டா மாவட்ட சுகாதார அலுவலகம் தற்போது இப்பகுதியில் நோய் அபாய மதிப்பீட்டை மேற்கொண்டு வருகிறது. அதன் முடிவுகள் ஈப்போ மாநகர் மன்றம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களிடம் வழங்கப்படும் என்றார்.

இதனிடையே, 2026ஆம் ஆண்டின் 31ஆவது வாரம் வரை பேரா மாநிலத்தில் 66 புதிய டிங்கி வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் இந்த ஆண்டு மொத்த டிங்கி சம்பவங்கள் எண்ணிக்கை 1,712 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 477 வழக்குகள் அல்லது 38.6 சதவீத அதிகரிப்பாகும். இதுவரை ஒரு டிங்கி மரணம் பதிவாகியுள்ளது.

பராமரிப்பின்றி காணப்படும் தனியார் வீடுகளின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையான அறிவிப்பு வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளத் தவறினால், சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் அதிகாரிகள் அந்த வளாகத்திற்குள் சென்று தேவையான துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு, அதற்கான செலவை உரிமையாளரிடமிருந்து வசூலிக்கும் நடைமுறையைப் பரிசீலிக்கலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset