நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் 6.7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்

பிரிக்பீல்ட்ஸ்:

இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் மித்ரா 6.7 மில்லியனை ரிங்கிட்டை இன்று வழங்கியது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

மடானி அரசாங்கம், இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

மித்ரா மூன்று முக்கிய முன்னெடுப்புகளான மடானி கல்விக் கட்டணம், உயர் மடானி, தர்ம மடானி திட்டங்களைச் செயல்படுத்த, மொத்தமாக 6.7 மில்லியன் ரிங்கிட் நிதி வெற்றிகரமாக இன்று வழங்கப்பட்டது.

இத்திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், தொழில்முனைவோர், இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும்.

மடானி டியூசன் கல்வித் திட்டம் 2026க்காக, ஏழு மாநிலங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 28 பயிற்சிக் கல்வி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதில் 2,343 எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பங்கேற்பார்கள். இதற்காக மொத்தம் 2.63 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2026 வரை ஐந்து மாதங்களுக்குச் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், கல்விசார் சாதனைகளை மேம்படுத்தவும், கல்வி இடைவெளிகளைக் குறைக்கவும், குடும்பத்தின் நிதிச் சுமைகளைக் குறைக்கவும் உதவும் வகையில், கட்டமைக்கப்பட்ட முறையில் இலவசப் பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது.

இந்திய தொழில்முனைவோர் மானியத் திட்டமான உயர்வு மடானி முதல் தொடர், 2026-ஆம் ஆண்டு மூலம் 3.05 மில்லியன் ரிங்கிட்  மானியங்களைப் பெற மொத்தம் 128 தொழில்முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டம், தொழில்முனைவோரின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், போட்டித்திறனை வலுப்படுத்தவும், சந்தையை விரிவுபடுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

52 ஆலயங்களுக்கு 1.04 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் தர்ம மடானி திட்டத் தொடர் 4இன் கீழ்  மானியங்களும் வழங்கப்பட்டன.

மொத்தத்தில், இன்று வரை தர்ம மடானி திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 676 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு அரசாங்கம் 13.52 மில்லியன் ரிங்கிட் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உதவியானது, மாணவர்களுக்கான கலாச்சார வகுப்புகளை நடத்துவதற்கும், உள்ளூர் சமூகத்தினருக்குக் கற்றல் செயல்பாடுகள், கலாச்சாரம், சமூக நிகழ்ச்சிகளுக்கான இடங்களை வழங்கும் சமூக மையங்களை மேம்படுத்துவதற்கும் துணை புரியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்







தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset