நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்காவியில்  ஓர் இந்து கோவிலில் புனிதமான சூலத்தை மிதித்து சேதப்படுத்திய சம்பவம்: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் தமீம் தஹ்ரி 

லங்காவி - 

லங்காவியில் உள்ள ஓர் இந்து கோவில் தளத்தில் இந்து சமயத்தின் புனிதமாக கருதப்படும் சூலத்தை மிதித்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக தமீம் தஹ்ரி இன்று லங்காவி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 

இருப்பினும், 34 வயதான தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் தனக்கு எதிரான அனைத்து குற்றத்தையும் மறுத்து விசாரணை கோரினார். 

கடந்த மார்ச் 8ஆம் தேதி, குவாஹ் செலாட் பஞ்சோரிலுள்ள பழைய ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணிக்குள் இந்து சமயத்தை அவமதிக்கும் நோக்கில் சூலத்தை மிதித்து சேதப்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

குற்றவியல் சட்டப் பிரிவு 295-இன் கீழ் தொடரப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்கும், விசாரணை முழுவதும் அவர் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்வதற்கும், தமீம் தாஹ்ரிக்கு பிணை வழங்க வேண்டாம் என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

இருப்பினும், எதிர்நோக்கப்படும் குற்றச்சாட்டு பிணையில் செல்லக்கூடியது என எதிர்தரப்பு வழக்கறிஞர் டத்தோ ஹனிஃப் ஹசான் வாதாடியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு 10,000 ரிங்கிட் பிணை வழங்க உத்தரவிட்டது.

இரு மலேசிய நாட்டவர்களின் உத்தரவாதத்துடன் கூடிய இந்த பிணை நிபந்தனையாக, தமீம் தஹ்ரி தனது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான மறு விசாரணைத் தேதியாக வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset