நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கி இதுவரை  RM3.8 பில்லியன் பணம் இழந்துள்ளனர்: டத்தோ ஸ்ரீ சைஃபுடின்

கோலாலம்பூர்:

மலேசியாவில் 2025-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி (Online Scam) வழக்குகள் 95,000-ஐத் தாண்டியுள்ளதுடன், இதனால் பொதுமக்கள் இழந்த ஒட்டுமொத்தத் தொகை RM3.80 பில்லியனை எட்டியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யோ பி இன் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் RM2.97 பில்லியன் இழப்புடன் 66,204 ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகின. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும் மேலும் 29,434 வழக்குகள் பதிவாகி, RM827.73 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மோசடிகளில் முக்கியமாக தொலைபேசி அழைப்பு மோசடிகள் (Phone Scams), காதல் மோசடிகள் (Love Scams), இ-காமர்ஸ், ஆன்லைன் நிதி குற்றங்கள், இல்லாத கடன், போலி முதலீட்டுத் திட்டங்கள் என்பன அடங்கும்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை முடக்கி அதை மீட்பதில் தேசிய மோசடி எதிர்ப்பு மையம் (NSRC) தீவிரமாகவும் திறம்படவும் செயல்பட்டு வருகிறது.

இதில் 2025-இல் முடக்கப்பட்ட RM17.49 மில்லியனில் 38 சதவீதத் தொகையான RM6.65 மில்லியன் பாதிக்கப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

2026 (ஜனவரி – மே) வரையான காலப்பகுதியில் பணத்தை மீட்கும் வீதம் 49 சதவீதமாக உயர்ந்து, முடக்கப்பட்ட RM7.25 மில்லியனில் RM3.57 மில்லியன் பணம் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சைஃபுடின் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset