நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து குண்டுவெடிப்பு சம்பவம்: மலேசியப் பயணிகள் இலக்கு அல்ல

கோத்தா பாரு: 

தாய்லாந்தின் நராதிவாட் மாகாணம், தக் பாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இரு மலேசியர்கள், உண்மையான இலக்குகள் அல்ல என்று தாய்லாந்து போலிஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நராதிவாட் மாகாண காவல்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் பிராயோங் கோட்சாகா, சுமார் 70 கிலோகிராம் எடையுள்ள வெடிகுண்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்குள் மறைத்து, சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்தது.

இலக்கிடப்பட்ட வாகனம் சம்பவ இடத்தை நெருங்கியவுடன், ரிமோட் கட்டுப்பாட்டு கருவி மூலம் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக விசாரணையில் உறுதியானது என்று தெரிவித்துள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, தாக்குதல் வேறொரு வாகனத்தைக் குறிவைத்து திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குண்டுவெடிப்புக்குச் சில நொடிகள் முன்பு, இரண்டு மலேசியர்கள் பயணித்த வாகனம் அந்த இலக்கு வாகனத்தை முந்திச் சென்றதால், அவர்கள் தற்செயலாக தாக்குதலுக்குள்ளாகியதாக போலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் தெற்கு தாய்லாந்தின் எல்லைப் பகுதியில் இயங்கி வரும் கிளர்ச்சியாளர் அமைப்புகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிராயோங் கூறினார்.

தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் (EOD) பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து எரிவாயு சிலிண்டர் சிதிலங்கள், வெடிபொருள் கூறுகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சேகரித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் குண்டுவெடிப்பில், விடுமுறைக்காக நராதிவாட்டிற்கு சென்றிருந்த 45 வயதான அப்துல்லா ஷராபி அப்துல் ரஹ்மான், 38 வயதான முஹம்மத் யூஸ்ரி உடின் ஆகிய இரு மலேசியர்கள் காயமடைந்தனர்.

ஆரம்ப சிகிச்சைக்குப் பின்னர், அவர்கள் கோத்தா பாருவிலுள்ள ராஜா பெரெம்புவான் சைனாப் II (HRPZ II) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின்னரும் கிளந்தான் – தக் பாய் எல்லைப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

பெங்காலான் குபோரில் உள்ள சுங்கை கோலோக் ஆற்றின் வழியாக படகு போக்குவரத்தும், பொதுமக்களின் எல்லைத் தாண்டிய பயணங்களும் வழக்கம்போல தொடர்வதாகக் காணப்பட்டது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset