நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உரையாடலும் இராஜதந்திரமுமே தென் சீனக் கடலின் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் அன்வார் உறுதியான நிலைப்பாடு

கோலாலம்பூர்: 

தென் சீனக் கடல் மோதலின் மேடையாக அல்ல, உரையாடல், பேச்சுவார்த்தை, இராஜதந்திரத்தின் வழியே அமைதியை நிலைநிறுத்த வேண்டிய பிராந்தியமாக பார்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற 39-வது ஆசிய-பசிபிக் ரவுண்ட் டேபிள் மாநாட்டில் பேசிய அவர், சீனாவுடனான மலேசியாவின் அனுபவம், கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் இரு நாடுகளும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், உரையாடல் வழியே உறவை முன்னெடுத்து வருவதை நிரூபிப்பதாகக் குறிப்பிட்டார்.

“தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து நான் அளவுக்கு மீறிய கவலை கொள்ளவில்லை. கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன; ஆனால் அவை அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளின் மூலம் கையாளப்பட்டு வருகின்றன,” என்று அன்வார் தெரிவித்தார்.

சீனா, ஐக்கிய நாடுகள் கடல் சட்டக் கன்னொலி (UNCLOS), தென் சீனக் கடலுக்கான நடத்தை விதிமுறையை (Code of Conduct) இறுதி செய்வதற்கான முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், அந்த உறுதிப்பாட்டை மேலும் பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்தும் அடித்தளமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புரூணை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் சில எல்லை விவகாரங்களை எதிர்கொண்டாலும், அனைத்தும் பதற்றத்தை அதிகரிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் கையாளப்பட்டன என்று அன்வார் நினைவுபடுத்தினார்.

சீனாவுடனும் சில பிரச்சினைகள் இருப்பதை தாம் நேரடியாக அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங் ஆகியோரிடம் எடுத்துரைத்ததாக கூறிய அவர், அதுவே இருநாட்டு உறவை பாதிக்கவில்லை என்றார்.

“பிரச்சினைகள் உள்ளனவா? ஆம். மோதலுக்கான சாத்தியம் உள்ளதா? ஆம். ஆனால் பெரும் பதற்றத்தை உருவாக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எதுவும் நிகழவில்லை,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சில வெளி வல்லரசுகள் தென் சீனக் கடலில் போர் சாத்தியம் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன என்றாலும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைதி, நிலைத்தன்மை, இராஜதந்திரத் தீர்வுகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மலேசியா தனது சுதந்திர வெளியுறவுக் கொள்கையை தொடர்ந்து பேணும் என்றும், சீனா உட்பட அனைத்து தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டை முன்னிறுத்தும் என்றும் அன்வார் உறுதியளித்தார். இதன் மூலம் பிராந்திய அமைதி, பாதுகாப்பு, பொருளாதார செழிப்பை நிலைநிறுத்துவதே அரசின் நோக்கம் என அவர் கூறினார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset