நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அஸாம் பாக்கி பங்கு சர்ச்சை மீண்டும் சூடுபிடித்தது; விசாரணை அறிக்கையை உடனே வெளியிடுங்கள்: 5 PKR எம்.பி.க்கள் வலியுறுத்தல்

கோலாலம்பூர்: 

முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (MACC) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கியின் பங்கு உடைமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முழு முடிவுகளையும் அரசாங்கம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று பிகேஆர் (PKR) கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், அஸாம் பாக்கி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றுவிட்டார் என்பதற்காக இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருத முடியாது என்று தெரிவித்தார்.

"அரசாங்கம் மேற்கொண்ட விசாரணையின் முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும். மக்களுக்கு உண்மையை அறியும் உரிமை உள்ளது," என்று அவர் நாடாளுமன்ற ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்தக் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் ஆகியோரும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அரச விசாரணை ஆணையம் (Royal Commission of Inquiry - RCI) அமைத்து, சுயாதீனமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, கடந்த ஜூன் 30-ஆம் தேதி, பல குடிமை சமூக அமைப்புகள் இணைந்து செயல்படும் RCI Now கூட்டமைப்பும், கூறப்படும் "கார்ப்பரேட் மாஃபியா" நடவடிக்கைகள் குறித்து RCI அமைக்கவும், MACC-யின் நிர்வாக, ஆளுகை அமைப்பில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசாங்கத்தை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்தது.

"கார்ப்பரேட் மாஃபியா" என்பது, சில மூத்த MACC அதிகாரிகள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள், பங்குதாரர்களைப் பதவி விலகவோ அல்லது தங்களது பங்குகளைக் குறைந்த விலைக்கு குறிப்பிட்ட வணிகக் குழுக்களிடம் விற்கவோ அழுத்தம் கொடுத்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் குறிக்கிறது.

எனினும், MACC இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், தனது விசாரணை, அமலாக்க நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையைக் களங்கப்படுத்தும் நோக்கிலான முயற்சியே இத்தகைய குற்றச்சாட்டுகள் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset