செய்திகள் மலேசியா
கேம் ஹோபார்ட் விபத்து: துப்பாக்கிச் சூடு பயிற்சிக்குத் தற்காலிக தடை, விசாரணைக் குழுவை அமைத்தது மலேசிய தரைப்படை
கோலாலம்பூர்:
கெடா மாநிலம் குரூன் அருகிலுள்ள கேம் ஹோபார்ட்டில் நடைபெற்ற துணை ஆயுதத் துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மலேசிய தரைப்படை (TDM) சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதுடன், துணை ஆயுதங்களைப் பயன்படுத்தும் அனைத்து துப்பாக்கிச் சூடு பயிற்சிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
தரைப்படைத் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ அஸ்ஹான் மட் ஒத்மான், அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு மனிதப் பிழை, தொழில்நுட்பக் கோளாறு, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) பின்பற்றப்பட்ட விதம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை விரிவாக ஆராயும் என்றார். சாட்சிகளின் வாக்குமூலம், ஆயுதத்தின் தொழில்நுட்ப ஆய்வு, சம்பவத்தின் முழுமையான பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆரம்பக் கட்ட விசாரணையில், சம்பவம் நிகழ்ந்தபோது SOP விதிமுறைகள் மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் விளக்கினார்.
இந்தச் சம்பவம் 'ஜெனரல் பர்பஸ் மெஷின் கன்' (GPMG) பயன்படுத்திய பயிற்சியின் போது ஏற்பட்டது. துப்பாக்கியின் 'ரெகுலேட்டர்' பகுதி திடீரென கழன்று விழுந்ததைத் தொடர்ந்து, அதை இயக்கிய வீரர் உடனடியாக துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி ஆயுதத்தை தரையில் பாதுகாப்பாக வைத்தார். பின்னர் கழன்றுபோன பாகத்தை மாற்றுவதற்காக தேடியபோது, ஆயுதம் எதிர்பாராத விதமாக வெடித்ததில், பறந்த பொருள் இரு வீரர்களையும் தாக்கி காயமடையச் செய்ததாக அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாத வகையில், ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு பயிற்சிக்கும் முன்பாக ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்படுவதாகவும், உயிருள்ள தோட்டாக்களைப் பயன்படுத்தும் பயிற்சிக்கு முன் வீரர்கள் கட்டாயம் கோட்பாட்டு பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும் என்றும் தரைப்படைத் தளபதி குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், பெர்லிஸின் கேம் புக்கிட் கவுடர் முகாமைச் சேர்ந்த கோப்பரல் தர வீரர் ஒருவர் இடது முழங்காலில் காயமடைந்து, அதிக இரத்தப்போக்கால் நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு சார்ஜென்ட் தர பயிற்றுவிப்பாளர் வலது தொடையில் காயமடைந்து, அவருக்கு எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 7:40 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் விலைகள் 10 சென் குறைந்தது
June 30, 2026, 7:39 pm
ஜொகூரில் நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது: குணராஜ்
June 30, 2026, 5:32 pm
நாளை முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
June 30, 2026, 4:42 pm
